வாடிக்கையாளர்கள் விவரம் திருட்டு.. கொல்கத்தாவில் விப்ரோ ஊழியர்கள் 3 பேர் கைது
கொல்கத்தா: வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடியதாக கொல்கத்தாவில், விப்ரோ நிறுவன பி.பி.ஓ பிரிவில் பணியாற்றும் மூன்று ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரிட்டீஷ் தொலைதொடர்பு நிறுவனமான டாக்டாக், தனது வாடிக்கையாளர் சேவை மையத்தை நிர்வகிக்கும் பொறுப்பை விப்ரோவிடம் அளித்திருந்தது. இதற்காக விப்ரோ நிறுவனம், 2011ம் ஆண்டு முதல், 1000 ஊழியர்கள் கொண்ட பி.பி.ஓ அலுவலகத்தை கொல்கத்தாவில் நடத்தி வருகிறது.
இந்நிலையில், சுமார் 157,000 வாடிக்கையாளர்களின் தகவல்களை விப்ரோ பிபிஓ ஊழியர்கள் திருடிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, 3 ஊழியர்களை, கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து விப்ரோ நிறுவனம் கூறுகையில், வாடிக்கையாளர்கள் பாதுகாப்பில் நாங்கள் ஒரு சதவீதம் கூட விட்டுக்கொடுக்க மாட்டோம். தற்போது இந்த விவகாரம் குறித்து மேலதிக தகவல்களை தெரிவிக்க முடியாத நிலையில் உள்ளோம் என்று தெரிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்திற்கு அதிகமாக பில் தொகை உருவாக்கியதாக இன்போசிஸ் நிறுவன ஊழியர்கள் மீது புகார் எழுந்ததும் இதையடுத்து இன்போசிஸ் பிபிஓ பிரிவு தலைமை செயல் அதிகாரி பதவி விலகியதும் குறிப்பிடத்தக்கது. .