"ரத்தக் கண்ணீர்" வடிக்கும் 3 வயது சிறுமி... மத்திய, மாநில அரசுகளின் உதவியை நாடும் தந்தை
ரத்தக் கண்ணீர் வடிக்கும் அரிய வகை நோய்க்கு ஆளான 3 வயது சிறுமி ஹைதராபாதில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தை சேர்ந்த 3 வயது சிறுமிக்கு கண்ணீருடன் ரத்தம் கலந்து வரும் நோய்க்கு ஆளாகியுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹைதராபாதைச் சேர்ந்தவர் முகமது அஃப்சல். இவருக்கு 3 வயதில் அஹானா அஃப்சல் என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை ஒரு வயதாக இருக்கும் போதே மூக்கில் இருந்து ரத்தம் வந்ததாம்.
இதனால் பதறியடித்து மருத்துவமனைக்கு சென்றபோது சிறுமிக்கு காய்ச்சல் இருப்பதால் இதுபோன்று ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தந்தையிடம் தெரிவித்தனர்.
ரத்தம் வெளியேறுதல்
நாளடைவில் வாய், காது, கண்கள் மற்றும் பிறப்புறுப்பு ஆகிய இடங்களில் இருந்தும் அந்த சிறுமிக்கு ரத்தம் வடிந்தது. இதைத் தொடர்ந்து தற்போது அந்தச் சிறுமி ஹைதராபாதில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரத்தமே வியர்வை
இதுகுறித்து குழந்தைகளுக்கான புற்றுநோய் நிபுணர் ஒருவர் தெரிவிக்கையில், மனிதர்களுக்கு ரத்தமே வியர்வையாக வரும் ஹெமட்டிரோசிஸ் என்ற அரிய வகை நோயால் சிறுமி பாதிக்கப்பட்டிருக்கலாம். மருத்துவ சிகிச்சை கொடுத்த பிறகு ரத்தம் வடிவது குறைந்துள்ளது.
குணமாக்க முயற்சி
அவர் குழந்தை என்பதால் ரத்தம் வடிந்தது அவரது உடல்நிலையை பாதித்துள்ளது. அவருக்கு பலமுறை ரத்த மாற்றம் செய்ய வேண்டியதிருந்ததால் அவர் மருத்துவமனையில் பல முறை அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது ரத்தம் வடிவது முற்றிலும் குணமாவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம் என்றார் அவர்.
நிமோனியா நோய்
இதுகுறித்து சிறுமியின் தந்தை முகமது அஃப்சல் தெரிவிக்கையில், குழந்தைக்கு ஒரு வயது முதலே நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டார். இதற்கு நிரந்தர தீர்வு காணமுடியுமா என்ற கேள்விக்கு மருத்துவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை.
மத்திய, மாநில அரசுகள்
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எனது குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மற்ற மருத்துவமனையின் மருத்துவர்களிடமும் ஆலோசனை பெற்று வருகின்றனர். எனது மகளை குணமாக்க மத்தி, மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.