பன்றிக்காய்ச்சல் பலி 1319ஆக உயர்வு; கோவையில் ஒரே குடும்பத்தில் 5 பேர் சீரியஸ்
டெல்லி: பன்றிக்காய்ச்சல் நோய்க்கு நாடு முழுவதும் மேலும் 30 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 319 ஆக அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குளிர்காலத்தில் தொடங்கிய பன்றிக்காய்ச்சல் கோடை காலம் வந்தும் தீவிரம் குறையாமல் உள்ளது. கொத்துக் கொத்தாக மடிந்து வருவதால் மக்களிடையே பீதி அதிகரித்துள்ளது.
24,661 பேர் பாதிப்பு
மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வரை எடுத்துள்ள புள்ளி விவரங்களின் படி, பன்றிக்காய்ச்சல் நோய்க்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 661 ஆக உயர்ந்துள்ளது.
1319 பேர் பலி
பன்றிக்காய்ச்சல் நோய்க்கு அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் 324 பேரும், ராஜஸ்தான் மாநிலத்தில் 305 பேரும் உயிரிழந்துள்ளனர். நாடுமுழுவதும் 1319 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவையில் 6 பேர்
கோவை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் துவங்கிய பன்றிக்காய்ச்சல் பாதிப்பு, பிப்ரவரியில் அதிகரித்தது. கடந்த, 10 நாட்களில் கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த ஆறு பேர் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர்.
ஒரே குடும்பத்தில்
இந்த நிலையில் கோவை சேரன்மாநகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சிறப்பு வார்டு
கோவை மாவட்டத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்டோர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.பன்றிக்காய்ச்சலில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கோவை அரசு மருத்துவமனையில், அதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வார்டு, மேம்படுத்தப்பட்டுள்ளது.