கோவில் அன்னதானத்தில் கலப்படமா?... திருவனந்தபுரத்தில் 300 பேர் வாந்தி, மயக்கம்!
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் வாந்தி, மயக்கத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
திருவனந்தபுரம் அருகே வெஞ்சாரமூடை அடுத்துள்ள வெம்பாயத்தில் ஒரு சாஸ்தா கோவில் உள்ளது. இங்கு பங்குனி உத்திர விழா நடந்து வருகிறது.
இதையொட்டி கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று பகல் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அன்னதானம் சாப்பிட்டனர். உணவு அருந்திய சிறிது நேரத்திலேயே பக்தர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அன்னதானம் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. மயங்கி விழுந்த பக்தர்களை ஆம்புலன்ஸ்கள் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றனர்.
சுமார் 300 பக்தர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அவர்களுக்கு டாக்டர்கள் குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தனர். பாதிக்கப்பட்டவர்களில் 20 பக்தர்கள் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த தகவல் கிடைத்ததும் கேரள முதல்வர் உம்மன்சாண்டி, சுகாதார துறை அமைச்சர் சிவக்குமார் மற்றும் வெஞ்சாரமூடு எம்.எல்.ஏ. ரவி, பாலோடு எம்.எல்.ஏ. கிருஷ்ணநாயர் மற்றும் அதிகாரிகள் ஆஸ்பத்திரிக்கு சென்று பக்தர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.
மேலும் வெஞ்சாரமூடு போலீசாரும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் அந்த கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அன்னதான உணவின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் சாப்பிட்ட அன்னதானத்தில் காலாவதியான உணவு பொருட்கள் கலந்து இருக்கலாம் என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இது பற்றி கோவில் நிர்வாகத்தினர் கூறும் போது அன்னதானம் சாப்பிட்ட பக்தர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது ஏன் என்பதை அதிகாரிகள் உடனடியாக கண்டறிந்து தெரிவிக்க வேண்டும். அப்போது தான் பக்தர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பம் தீரும் என்றனர்.
பாதிக்கப்பட்ட பக்தர்களில் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளில் அவர்களின் உறவினர்களும் திரண்டு இருப்பதால் தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.