ஒடிசா : மதிய உணவை சாப்பிட்ட 300 பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
கஞ்சம்: ஒடிசா பள்ளி ஒன்றில் மதிய உணவு சாப்பிட்ட 300 மாணவர்களுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
ஒடிசாவின் ஆந்திர எல்லையோரம் உள்ள கஞ்சம் மாவட்டத்தின் சனாக்கமுண்டி ஒன்றியத்தில் உள்ள அடப்பாடா கிராமத்தில் ஆரம்பப் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு 300க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியின் மதிய உணவை சுய உதவிக் குழுவினர் சமைத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாணவர்களுக்கு மதிய உணவாக அரிசிச் சோறும், முட்டைக் கறியும் வழங்கப் பட்டுள்ளது.
உணவை அருந்திய சிறிது நேரத்திலேயே மாணவர்களில் பலருக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது. மேலும், சில மாணவர்கள் வயிறு வலியால் அவதிப் பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து 300 மாணவர்களும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் பெரும்பாலான மாணவர்கள் வீடு தீரும்பிவிட்டதாகவும், 10 மாணவர்களுக்கு மட்டும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மதிய உணவு விஷமாக மாறியிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.