ஜம்மு காஷ்மீரில் நுழைய காத்திருக்கும் 300 தீவிரவாதிகள்... ராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவல்!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்திற்குள் நுழைவதற்காக 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் தயாராக இருப்பதாக, மூத்த ராணுவ ஜெனரல் ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கு என்று எல்லையில் சிறப்பு தளங்களையும் அவர்கள் அமைத்து தயாராக இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து துணை ராணுவப்படையைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்து இருக்கும் பேட்டியில், ''எல்லையில் தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீரில், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள நவ்காம் என்ற இடத்தில் நுழைவதற்கு தயாராக இருக்கின்றனர். இந்த நிலையில்தான் நமது ராணுவத்தினர் அந்த இடத்தில் எச்சரிக்கப்பட்டு இருந்தனர். அப்போது, எல்லையில் அமைக்கப்பட்டு இருக்கும் இரும்பு வேலி வழியாக நுழைய தயாராக இருந்த இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன'' என்றார்.
கடந்த ஜூன் 30 ஆம் தேதி பேட்டி அளித்து இருந்த ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் கூறுகையில், ''எல்லையில் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைவதற்கு தீவிரவாதிகள் தயாராக இருக்கின்றனர்'' என்று தெரிவித்து இருந்தார்.