ஹிமாச்சல் பிரதேசத்தை மிரட்டும் கனமழை.. வெள்ளம்.. சுற்றுலா சென்ற தமிழக மாணவர்கள் ஆசிரியர்கள் தவிப்பு!
திருச்சி: ஹிமாச்சலப் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்ற தமிழக மாணவர்கள், ஆசிரியர்கள் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த காட்டூரை சேர்ந்த 31 பள்ளி மாணவர்கள், 9 ஆசிரியர்கள் குலுமணாலிக்கு சுற்றுலா சென்றனர்.
இந்நிலையில் அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. குலுமணாலியில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கரை புரளும் வெள்ளம்
தொடரும் மழையால் ஹிமாச்சல் பிரதேசத்தின் பல மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நதிகளில் வெள்ளப்பெருக்கு
குறிப்பாக சின்னாவூர், குலூ, கங்காரா மாவட்டங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. கனமழையால் ரவி, பியாஸ் உள்ளிட்ட நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெளியேறிய மக்கள்
மணாலியில் வெள்ளப் பெருக்கு காரணமாக மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
எச்சரிக்கை
ஒரு கனரக லாரி மற்றும் சொகுசு பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகி பீதியை கிளப்பியது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு அதிகரித்த வண்ணம் இருப்பதால் மக்கள் அருகில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிக்கி தவிப்பு
இந்நிலையில் திருச்சியை சேர்ந்த பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகிய 40 பேரும் தனியார் விடுதியை விட்டு வெளியேவர முடியாமல் தவித்து வருகின்றனர். 40 பேரும் தங்களை மீட்ககோரி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.