டெல்லி: 33 வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லி: டெல்லியில் உள்ள 33 வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் முக்கியப் பகுதிகளைத் தீவிரவாதிகள் தாக்கத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதாக சமீபகாலமாகவே ஊடகங்களில் செய்தி வெளி வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், இன்று தலைநகர் டெல்லியில் உள்ள 33 வெளிநாட்டு தூதரகங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிரட்டல் கடிதத்தை அனுப்பியது யார், அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது குறித்த தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. ஆனபோதும், மிரட்டல் கடிதங்கள் வந்ததையடுத்து டெல்லியில் உள்ள அனைத்து தூதரகங்களுக்கும் பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக மத்திய உளவுப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளதாகவும், டெல்லி போலீசும் தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.