உயிர் தப்பியது கடவுள் அருள்… ஏமனில் இருந்து இந்தியா திரும்பிய 359 பேர் உருக்கம்!
கொச்சி-மும்பை: ஏமனில் இருந்து மீட்கப்பட்ட 350 இந்தியர்கள்,பத்திரமாக நேற்றிரவு தாயகம் திரும்பினர். அவர்களை மும்பை, கொச்சி விமானநிலையத்தில் காத்திருந்த உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். உயிர்தப்பியது கடவுள் செயல் என்று தெரிவித்த அவர்கள், பத்திரமாக மீட்ட இந்திய அரசுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
ஏமன் நாட்டில் அரசுப் படைகளுக்கும், ஹெளதி இனத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தீவிர மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்நாட்டில் சிக்கியிருக்கும் 4,000 இந்தியர்களை மீட்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
உள்நாட்டு போர் காரணமாக குண்டு சத்தம் கேட்கும் ஏமனில் அமைதி இழந்து காணப்படுகிறது. இதனால் அங்கு வசிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட ஏராளமான இந்தியர்கள் உயிர் பயத்தில் இருந்தனர்.
கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள ஏமன் நாட்டில் 4 ஆயிரம் இந்தியர்களை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
மோடி பேச்சு
ஏமனில் சவுதி அரேபியா நடத்தும் போர் குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் ஆஸிஸை செவ்வாய்கிழமை இரவு தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது அவர், ஏமனில் இருக்கும் இந்தியர்களை மீட்டு நாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியை தனது அரசு செய்துள்ளதாகவும், மீட்பு பணிக்கு ஒத்துழைக்குமாறு அவரை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
தவிக்கும் இந்தியர்கள்
ஏமனின் துறைமுக நகரான ஏடனில் சிக்கி கொண்டிருக்கும் இந்தியர்களை மீட்டுக் கொண்டு வருவதற்காக சென்ற ஐ.என்.எஸ். சுமித்ரா கடற்படைக் கப்பல் 349 இந்தியர்களுடன் செவ்வாய்க்கிழமை இரவு அங்கிருந்து புறப்பட்டது
கப்பல்கள் மூலம்
கப்பலில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 220 ஆண்கள், 101 பெண்கள் மற்றும் 28 குழந்தைகள் என 349 பேருடன் பாதுகாப்பாக புறப்பட்டது. இதில் 40 பேர் தமிழர்கள் ஆவர். மீட்கப்பட்ட இந்தியர்கள் அனைவரும் ஏமனின் ஜிபவுத்தி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
விமானம் மூலம்
இதையடுத்து தங்களின் கையில் உயிரைப் பிடித்துக்கொண்டு உறவுகளைப் பார்க்கப் போகும் மகிழ்ச்சியில் 350 பேரும் பத்திரமாக விமானத்தில் கிளம்பினர்.
மும்பை - கொச்சி
சிறப்பு விமானங்கள் மூலம் கொச்சி விமான நிலையத்திற்கு 168 பேரும், மும்பைக்கு 190 பேரும் வந்த பயணிகளை அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் உருக்கம்
உயிர் தப்பி வந்த அனைவரும் தங்களைக் காண காத்திருந்த உறவுகளை கட்டிப்பிடித்து கதறியது உருக்கத்தை ஏற்படுத்தியது.
நிலைமை மோசம்
ஏமனில் நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாக நாடு திரும்பிய இந்தியர்கள் தெரிவித்தனர். மும்பை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த இந்தியர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யபபட்டுள்ளது.
அதிகரிக்கும் பதற்றம்
மக்கள் கூடும் இடங்கள் பள்ளிகளில் குண்டு வீச்சு நடைபெறுவதால் ஏமனில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
4000 இந்தியர்கள்
ஏமனில் 4000-த்துக்கு அதிகமான இந்தியர்கள் பல்வேறு பகுதிகளில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் செவிலியர்கள் ஆவர். பலதரப்பினர் போர் சூழல் அதிகம் இருக்கும் ஏடன் துறைமுகப் பகுதி, தலைநகர் சனா மற்றும் பதற்றமான அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலேயே வாழ்கின்றனர்.
இந்தியக் கப்பல்கள்
இவர்களை மீட்க ஐ.என்.எஸ். கவரத்தி, கோரல்ஸ், மற்றும் ஐ.என்.எஸ். சுமித்ரா, உள்ளிட்ட போர்க் கப்பல்கள் மற்றும் வர்த்தகக் கப்பல்கள் மூலம் பல்வேறுக் குழுக்கள் அமைத்து மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
வான் வழித்தாக்குதல்
இதனிடையே கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள ஏமன் நாட்டின் மீது சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுபடையினர் தொடர்ந்து 7-வது நாளாக வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.