நான் சபரிமலைக்கு போனேன்.. டை அடித்து மாறு வேடத்தில்.. 36 வயது பெண் பரபரப்பு
சபரிமலைக்குள் 36 வயதான இளம்பெண் சென்று வந்ததாக கூறப்படுகிறது.
Recommended Video
சபரிமலை: "தலைக்கு வெள்ளை டை, மாறுவேஷம் போட்டுக் கொண்டு சபரிமலைக்கு சென்றுவந்தேன்" என்று கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் மஞ்சு என் பெண் அளித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பாலின பாகுபாடுகள் களையப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த உத்தரவினை நீதிமன்றம் வழங்கியதாக ஒரு தரப்பு பார்க்கப்பட்டது.
எனினும், இது இந்து மதத்திற்கு எதிரான தீர்ப்பு என்று மற்றொரு தரப்பினர் கூறி சில மாதங்களாகவே கேரள மாநிலம் கொதிப்பில் காணப்படுகிறது.
பலத்த எதிர்ப்பு
தீர்ப்பை கண்டித்து இந்து அமைப்புகள் மற்றும் பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனால் சபரிமலைக்கு பெண்களால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், அம்மாநில அரசு பெண்கள் கோயிலுக்குள் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தது.
பதட்டமான போக்கு
அதன்படி கடந்த ஜனவரி 4-ம் தேதி அதிகாலையில் கேரளாவை சேர்ந்த கனகதுர்கா, பிந்து என்ற 2 பெண்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். இதனால் 2 பெண்களை தரிசனம் செய்ய வைத்து, கோவிலின் ஐதீகத்தை தகர்த்ததாக முதல்வர் பினராயி விஜயன், மீது குற்றஞ்சாட்டப்பட்டு வருவதுடன், இந்து அமைப்புகளும் பந்த், போராட்டம், வன்முறை என்ற பதட்ட போக்கில்தான் இப்போதும் உள்ளனர்.
18 படி ஏறி தரிசனம்
இந்தநிலையில் மஞ்சு என்ற இளம் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சு கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர். வயது 36 ஆகிறது. இவர் அய்யப்பன் கோயிலில் 18 படி ஏறி தரிசனம் செய்ததாக அம்மாநிலத்தின் ஒரு தனியார் டிவிக்கு பகிரங்கமாக பேட்டி அளித்துள்ளார். சாமி தரிசனம் செய்தபோது எடுத்த ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
வெள்ளை கலர் டை
அந்த வீடியோவில் மஞ்சு வயதானவர் போல காணப்படுகிறார். தலைமுடிக்கு வெள்ளை கலர் டை அடித்து, மாறு வேடம் அணிந்து, வயசான தோற்றத்துடன் சாமி கும்பிட்டு வந்திருக்கிறார் என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மஞ்சு பேசும்போது சொன்னதாவது:
மஞ்சு செய்த காரியம்
"கடந்த 8-ம் தேதி சபரிலைக்கு சென்றேன். வயதான தோற்றத்துடன், கிட்டத்தட்ட 2 மணி நேரத்துக்கும் மேலாக அங்கு இருந்தேன். கோயிலுக்குள் செல்ல போலீசாரின் அனுமதி எதையும் பெறவில்லை. போலீசாரின் பாதுகாப்பின்றி, பக்தர்களின் எதிர்ப்பில்லாமல் 18-ம் படி வழியாக சென்று தரிசனம் செய்து திரும்பினேன். எனக்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை" என்று தெரிவித்துள்ளார். மகர விளக்குக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் மஞ்சு செய்த காரியம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.