மாடியில் இருந்து விழுந்த இளைஞர்... செயற்கை மண்டை ஓடு பொருத்தி டாக்டர்கள் சாதனை
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் மாடியில் இருந்து விழுந்ததில் மண்டை ஓட்டில் பலத்த காயமடைந்த இளைஞருக்கு, செயற்கை மண்டை ஓடு பொருத்தி டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
ஹைதராபாத்தின் கோல்கொண்டா பகுதியைச் சேர்ந்த ஏர்கண்டிஷன் மெக்கானிக் தீபக் (25). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மாடி ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மண்டை ஓடு இரண்டாக பிளந்தது.
ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட தீபக்கிற்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. 15 நாள் கோமாவில் இருந்து மீண்ட அவருக்கு, அடிக்கடி கடுமையான தலைவலி ஏற்பட்டது. அதோடு சரிவர பேச முடியாமலும், கை, கால்கள் சரிவர இயக்க முடியாமலும் போனது. மண்டை ஓட்டின் பாதிப்பினாலேயே இவ்வாறு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து தீபக்கிற்கு செயற்கை மண்டை ஒடு பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதற்கென குறைந்த எடையில் வலுவான செயற்கை மண்டை ஓடு சுவிட்சர்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்டது. சாலி, இதய், ஈதர், கீயோன், பீக் போன்ற உலோகங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த மண்டை ஓடு மனித உடலோடு ஒன்றி செயல்படும் திறன் கொண்டது.
இந்த செயற்கை மண்டை ஓட்டை நிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தீபக்குக்கு பொருத்தி அறுவைச் சிகிச்சை செய்தனர். 12 மணி நேரம் நடக்க வேண்டிய அறுவை சிகிச்சையை நவீன தொழில் நுட்ப வசதியுடன் 30 நிமிடத்தில் டாக்டர்கள் செய்து சாதனை படைத்தனர்.
இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு தீபக் பழைய நிலையை அடைந்து உள்ளார். தற்போது அவரால் நன்றாக பேச, நடக்க முடிகிறது.
இளைஞருக்கு செயற்கை மண்டை ஓடு பொருந்தும் அறுவைச் சிகிச்சை இந்தியாவிலேயே நிம்ஸ் மருத்துவமனையில் தான் நடந்துள்ளது என மருத்துவமனை நியூராலஜி பிரிவு தலைவர் விஜய சாரதி கூறினார்.
மேலும், இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் செலவானது என்றும் அதனை தெலுங்கானா அரசே ஏற்றுக்கொண்டது என்றும் அவர் தெரிவித்தார்.