மே. வங்க அரசியலில் புதிய பரபரப்பு... மம்தா அமைச்சரவை கூட்டத்தில் நான்கு அமைச்சர்கள் ஆப்சன்ட்
கொல்கத்தா: மே. வங்கத்தில் பெரும் அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், மம்தா பானர்ஜி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நான்கு அமைச்சர்கள் கலந்துகொள்ளாதது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போதே அங்கு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. மம்தா பானர்ஜியை வீழ்த்தியே தீர வேண்டும் என்று குறிவைத்துப் பல அதிரடி நடவடிக்கைகளை பாஜக எடுத்து வருகிறது.
பாஜகவில் ஐக்கியமான தலைவர்கள்
கடந்த வாரம் உள் துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்ட பேரணியில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளின் 35க்கும் மேற்பட்ட தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர். இந்தக் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுவேந்து ஆதிகாரியும் பாஜகவில் ஐக்கியமானார்.
அமைச்சர்கள் ஆப்சன்ட்
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாநில தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நான்கு அமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை.
யார் அந்த அமைச்சர்கள்?
நேற்றைய கூட்டத்தில் சுற்றுலாத் துறை அமைச்சர் கவுதம் தேப் மற்றும் வட வங்க வளர்ச்சித் துறை அமைச்சர் ரவீந்திரநாத் கோஷ் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இவர்கள் இருவரும் மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர்கள். இருப்பினும், இவர்கள் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்தே எந்தவொரு அமைச்சரவை கூட்டத்திலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக பக்கம் சாயும் மற்றொரு அமைச்சர்?
அதேபோல பிர்பூமைச் சேர்ந்த மீன்வளத் துறை அமைச்சர் சந்திரநாத் சின்ஹா மற்றும் வனத் துறை அமைச்சர் ராஜீப் பானர்ஜி ஆகியோரும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ராஜீப் பானர்ஜி இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளாதது முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் திரிணாமுல் காங்கிரஸில் சிலருக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். சில வாரங்களுக்கு முன்பு அவரை சமாதானப்படுத்த முயற்சிகளும் மம்தா பானர்ஜியால் மேற்கொள்ளப்பட்டன.
பாஜகவிலும் நீடிக்கும் குழப்பம்
மறுபுறம் பாஜகவிலும் குழப்பம் நிலவுகிறது. திரனாமுல் காங்கிரஸின் சுவேந்து ஆதிகாரியை சேர்த்ததற்கு பாஜக தலைவர்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது. இது குறித்து ஊடகங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திய அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சயந்தன் பாசு உள்ளிட்ட மூவருக்கு விளக்கம் கேட்டு பாஜக தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.