மீட்பு பணிக்கு தயாராக இருங்கள்... அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மோடி உத்தரவு
டெல்லி: நிலநடுக்க மீட்புப் பணிகளுக்கு அனைத்து துறைகளும் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
நேபாளம், சீனா மற்றும் இந்தியாவில் இன்று மதியம் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் நில அதிர்வு ஏற்பட்டது. கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியதால் வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தில் சிக்கி பீகார் மாநிலத்தில் 10 பேர் பலியாகி உள்ளனர்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதியடைய தேவையில்லை என அவர் தெரிவித்தார். மேலும், நிலநடுக்கத்தால் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ள நேபாளத்திற்கு தேவையான உதவிகள் அனைத்தும் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரைத் தொடர்பு கொண்டு பேசிய ராஜ்நாத் சிங், நிலநடுக்க பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.
இந்நிலையில், நிலநடுக்கம் தொடர்பாக பிரதமர் மோடி இன்று உயர் அதிகாரிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, நிலநடுக்க மீட்பு பணி மற்றும் நிவாரண பணிகளுக்கு அனைத்து துறைகளும் தயாராக இருக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.