குஜராத்திலும் ஷாக்.. ராஜ்யசபா தேர்தல் நெருங்கும் நிலையில் காங். எம்எல்ஏக்கள் 4 பேர் திடீர் ராஜினாமா
அஹமதாபாத்: குஜராத்தில் நான்கு ராஜ்யசபா இடங்களுக்கு வரும் 26ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திடீர் திருப்பமாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 4 பேரும் ராஜினாமா செய்வதாக சபாநாயகர் ராஜேந்திர திரிவேதிக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் 24 எம்எல்ஏக்களை பாதுகாப்பாக ஜெய்பூருக்கு அனுப்பி வைத்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி அளித்து வரும் பாஜக அடுத்ததாக குஜராத் மாநிலத்தில் ராஜ்ய சபா எம்பி தேர்தலை குறி வைத்து காய் நகர்த்தி உள்ளது. அந்த மாநிலத்தில் 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீரென ராஜினாமா செயதிருப்பதால், ராஜ்யசபா தேர்தலில் பாஜக 3 இடங்களில் வெல்லும் என தெரிகிறது.
குஜராத் மாநில சட்ட சபையில் மொத்தம் 182 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சிக்கு 73 இடங்கள் இருந்தது. பாஜகவின் பலம் 103 ஆக உள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில் வரும் 26ம் தேதி நான்கு ராஜ்யசபா தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
3 இடங்களில் வெல்ல முயற்சி
இதில் பாஜகவிடம் தற்போது உள்ள பலத்தின்படி 2 இடங்களில் தான் வெல்ல முடியும். அதேநேரம் சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தாலோ அல்லது எதிராக வாக்களித்தாலோ 3 எம்பி இடங்களில் பாஜக வெற்றி பெற முடியும் , இந்நிலையில் காங்கிரஸ் கட்சி ராஜ்யசபா தேர்தலில் சக்திசிங் கோஹில் மற்றும் பாரத்சிங் சோலங்கியை நிறுத்தி உள்ளது. ஆனால் பாஜக, அபய் பரத்வாஜ், ரமிலா பரா, நர்ஹரி அமீன் ஆகிய 3 பேரை நிறுத்தியுள்ளது. இதன் மூலம் அங்கு தேர்தல் நடைபெறுவது உறுதியாகி உள்ளது.
சபாநாயகர் தகவல்
இந்நிலையில் திடீர் திருப்பமாக நான்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீரென சபாநாயகர் ராஜேந்திர திரிவேதியை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர். இதை அவரும் ஏற்றுக்கொண்டுள்ளார். இன்று நடைபெறும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் நான்கு எம்.எல்.ஏ.க்களின் பெயர்களை வெளியிடுவேன் என்று திரிவேதி கூறியுள்ளார்.
பாஜக அமைச்சர் தகவல்
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் உள்ள எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து பாஜகவில் சேர வாய்ப்பு உள்ளதாக குஜராத் மாநில அமைச்சர் குன்வர்ஜி பவலியா தெரிவித்தார். எனினும் காங்கரிஸ் கட்சி இதை மறுத்துள்ளது. காங்கிரஸ் தலைவர் பரேஷ் தனானி தனது டுவிட்டரில் இதுவரை ஒரு "நேர்மையான" காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட ராஜினாமா செய்யவில்லை என்றார்.
24 எம்எல்ஏக்கள் பாதுகாப்பு
இருப்பினும் நான்கு எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் பலம் 73 ல் இருந்து 69 ஆக குறைந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் கட்சி தன்னிடம் உள்ள 14 எம்எல்ஏக்களை பாஜகவுக்கு பயந்து ஜெய்ப்பூருக்கு மாற்றி உள்ளது. இதுவரை 24 எம்எல்ஏக்களை பாதுகாப்பாக ஜெய்ப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் உள்ளதால் பாஜக 3இடங்களில் வெற்றி பெறுவதற்கான முயற்சியில் வெற்ற பெறுமா என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரிந்துவிடும்.