ஜம்மு- காஷ்மீரில் என்கவுண்டர்... 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் நடந்த கடும் துப்பாக்கி சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
புல்வாமா மாவட்டம் ராஜ்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர், அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படை வீரர்களும் பதிலடி தாக்குதல் நடத்தினர். நீண்ட நேரம் நடந்த துப்பாக்கி சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிகாலை முதல் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படை வீரருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தாண்டில் மட்டும் இதுவரை 250 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.