சச்சின், ரேகா பதவிக்காலம் முடிவு... ராஜ்யசபாவுக்கு 4 புதிய எம்பிக்களை நியமித்தார் ஜனாதிபதி
சச்சின், ரேகா உள்ளிட்டோரின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து ராஜ்யசபாவுக்கு புதிய எம்பிக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
டெல்லி: சச்சின், ரேகா உள்ளிட்டோரின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து ராஜ்யசபாவுக்கு புதிய எம்பிக்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்தார்.
லோக்சபாவுக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்களை தேர்தல் ஆணையம் தேர்வு செய்து வருகிறது. அதேபோல் ராஜ்யசபாவுக்கு கட்சி சார்பில் உறுப்பினர்கள் நியமனம் செய்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அறிஞர்கள், சாதனையாளர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், இலக்கியவாதிகள் என 12 பேரை எம்.பி.க்களாக நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு.
அதன்படி 2012-ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்தி நடிகை ரேகா, சமூக ஆர்வலர் அனு ஆகா, பழம்பெரும் வழக்கறிஞர் கே பராசரன் ஆகியோர் மாநிலங்களவை எம்பிக்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களது பதவிக்காலம் 6 ஆண்டுகள் இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது.
இவர்களுக்கு பதிலாக விவசாயிகள் சங்கத் தலைவர் ராம் ஷகல், எழுத்தாளர் ராகேஷ் சின்ஹா, சிற்பி ரகுநாத் மொஹபத்ரா, நடனக் கலைஞர் சோனல் மான்சிங் ஆகியோரை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இவர்களின் பதவிக்காலம் 2024-இல் முடிவடையும்.