ஓடிஷாவில் யூனிபார்ம் போடாமல் வந்த காவலர்கள்... முட்டி போட வைத்த கண்டிப்பு இன்ஸ்பெக்டர்
முறையாக சீருடை அணியாமல் வந்த ஊர்க்காவல் படை வீரர்களை பொதுஇடத்தில் வைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முட்டி போட வைத்துள்ளார்.
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில், சீருடை அணியாத ஊர்காவல் படை வீரர்களுக்கு முட்டி போடும் தண்டனை அளிக்கப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா மாநிலம், மயூர்பான்ஜி மாவட்டம், பாரிபாடா பகுதியில் ரத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட வந்த 4 ஊர்க்காவல் படை வீரர்கள் முறையாக சீருடை அணியவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஒரு பெண் உள்பட நான்கு ஊர்காவல் படை வீரர்களுக்கு முட்டி போடும் தண்டனை அளித்தார் காவல் ஆய்வாளர். இது தொடர்பான புகைப்படம் நேற்று வெளியானதும் ஒடிசா மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பானது. நகரத்தின் முக்கிய பகுதியில், பொதுமக்கள் முன்னிலையில், இத்தகைய தண்டனை தருவது சரியா என்ற கேள்வியும் எழுந்தது.
ஊர்க்காவல் படையினர் மீதான நடவடிக்கை குறித்து விளக்கமளித்துள்ள காவல் ஆய்வாளர் சேத்தி, போலீசார் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர்களுக்கு தண்டனை விதித்ததாகவும், தனிப்பட்ட முறைய்ல எந்த விரோதமும் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் பொதுமக்கள் கூடும் இடத்திற்கு காக்கி பேண்ட்டுடன் சாதாரண சட்டை அணிந்து வந்ததால் இனி இது போன்று செய்யக் கூடாது என்பதற்காகவே 3 நிமிடங்கள் மட்டும் முட்டி போட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
எனினும் ஊர்க்காவல் படை வீரர்களை பொதுஇடத்தில் முட்டி போடி வைத்த செய்தி புகைப்படம் மற்றும் வீடியோவாக சமூக வலைதளங்களில் தீயாக பரவியதால் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மயூர்பான்ஜி மாவட்ட எஸ்.பி.,யிடம் இது குறித்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாக ஊர்க்காவல்படை டிஜிபி கூறியுள்ளார். மேலும் விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.