உயிர் குடிக்கும் பெங்களூர் 'மரண கிணறுகள்'.. 10 நாட்களில் இளம் பெண் உட்பட 4 பேர் பலி!
பெங்களூர்: தொடர் மழையால் பெங்களூரின் சாலைகள் படு மோசமாக கிணறு போல மாறியுள்ளதால், அதை சார்ந்த விபத்துகளில் இந்த 10 நாட்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் அச்சுறுத்துகின்றன.
ஐடி தலைநகர் பெங்களூர் செப்டம்பர் மாதத்தில் வரலாறு காணாத மழையை எதிர்கொண்டது. சாதாரண மழைக்கே காணாமல் போகும் சாலைகள், இந்த மழைக்கு பொறுக்குமா? குண்டும், குழியுமாக சாலைகள் காட்சியளிக்கின்றன.
வேகமாக செல்லும் வாகனங்கள், அதிலும் டூவீலர் ஓட்டிகள், குண்டு, குழியில் இருந்து தப்பிக்க திடீரென பிரேக் போடுவது, வண்டியை திருப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
இன்று நடைபெற்ற இப்படியான ஒரு விபத்தில், தேவனஹள்ளி பகுதியை சேர்ந்த, 21 வயது இளம் பெண், வீணா பலியானார். வீணா தனது அக்கா லட்சுமியின் ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து பயணித்தார். அப்போது குண்டு, குழியில் சிக்கி ஸ்கூட்டர் கீழே சரிந்தது. அப்போது பின்னாலிருந்து வந்த லாரி அவர்கள் மீது ஏறிச் சென்றது. இதில் வீணா சம்பவ இடத்தில் பலியானார். லட்சுமி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரை தேடி வருகிறார்கள். கடந்த திங்கள்கிழமை, மைசூரு சாலை, நாயன்டஹள்ளியில் ஒரு பெண்ணும், கடந்த வாரத்தில் கே.ஆர்.மார்க்கெட் பகுதியிலுள்ள மைசூர் ரோடு மேம்பாலத்தில் ஒரு வயதான தம்பதியும், பைக்கில் சென்றபோது குண்டு, குழி காரணமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
நிலைமை மோசமாகும் நிலையில், இன்னும் 2 வாரங்களுக்குள் நகரிலுள்ள சாலைகள் அனைத்தும் செப்பனிடப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.