'ஹம்பி' கோவில் தூண்களை உடைத்தது ஏன்?... கைதானவர்கள் சுவாரஸ்ய வாக்குமூலம்
Recommended Video
பெல்லாரி: யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட இடங்களில் பட்டியலிடப்பட்டுள்ள 'ஹம்பி' கோவிலில் தூண்களை உடைத்த 4 இளைஞர்களை கர்நாடகா போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடகாவில் பெல்லாரி மாவட்டத்தில் அமைந்துள்ளது 'ஹம்பி'. விஜயநகர பேரரசு காலத்தில் இது தான் தலைநகரமாக திகழ்ந்தது.
'துங்கபத்ரா' நதிக்கரையில் அமைந்த இந்த ஹம்பியில் அழகான கற்கோயில்களும், நுட்பமான கலை நேர்த்தியோடு செதுக்கப்பட்ட சிற்பங்களும், அதைச் சுற்றிலும் மலைகளும் அமைந்துள்ளது. காண்போரை பரவசத்தில் ஆழ்த்தும் இந்த ஹம்பி யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரல்
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 1ம் தேதி ஹம்பியின் விருபாக்ஷா கோவிலில் சில தூண்களை இளைஞர்கள் கீழே தள்ளி விட்டு உடைத்துள்ளனர். இதை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இந்த செயலை செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
4 இளைஞர்கள் கைது
இதையடுத்து இந்திய தொல்லியல் துறையினர் அளித்த புகாரின் பேரில் பெல்லாரி மாவட்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். குற்றவாளிகளை தீவிரமாக தேடிய போலீசார் நான்கு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
வீடியோ எடுப்பு
இது தொடர்பாக பெல்லாரி மாவட்ட எஸ்பி அருண் ரங்கராஜன் பேசியதாவது, பெல்லாரியில் ரயில்வே தேர்வு எழுத வந்த ஐந்து இளைஞர்கள் அப்படியே, ஹம்பியை சுற்றி பார்த்துள்ளனர். அதில், மூன்று பேர் சேர்ந்து விஷ்ணு கோவில் தூணை கீழே தள்ளி உடைத்துள்ளனர். இதை இன்னொருவர் வீடியோ எடுத்துள்ளார். 5 வது நபருக்கு இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அவர் வேறு இடத்தில் சுற்றி பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.
பீகார் போலீஸ் உதவி
நாங்கள் பீகார் போலீஸ் உதவியுடன் குற்றவாளிகளை கைது செய்து அழைத்து வந்துள்ளோம். ஒருவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். மற்ற இரண்டு பேரும் பெங்களூருவைச் சேந்தவர்கள். ராஜா பாபு (21), ஆர்.ஏ. ராஜ், சௌத்ரி (24) மற்றும் ஆயுஷ் ஷாகு ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் வாக்குமூலம்
இந்த நான்கு பேரிடம் ஏன் கோயில் தூணை உடைத்தீர்கள் என்று விசாரித்த போது, அவர்கள், சுற்றிபார்த்துக் கொண்டிருந்த போது ஜாலிக்காக செய்தோம் என்று தெரிவித்தனர். ஹம்பி தூண்கள் எவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அப்போது அவர்களுக்கு தெரியவில்லை என்றும் மாவட்ட எஸ்பி கூறினார்.