சத்தீஸ்கரில் 4 போலீசாரைக் கடத்திச் சென்ற மாவோயிஸ்டுகள்..வனப்பகுதியில் தேடுதல் வேட்டை...
ராய்ப்பூர் : பிஜப்பூர் மாவட்டத்தில் 4 போலீசாரை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்ற சம்பவம் சட்டீஸ்கரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குட்ரு காவல் நிலையத்திற்கு பேருந்தில் 4 போலீசாரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது பேருந்தை வழிமறித்த மாவோயிஸ்டுகள் போலீசார் 4 பேரையும் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.
நான்கு போலீசாரும் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள கூடுதல் காவல் இயக்குநர் ஜெனரல் ஆர்.கே.விஜ், நால்வரும் மவோயிஸ்டு தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர்கள் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து பிஜப்பூர் காவல் கண்காணிப்பாளர் துருவ் தலைமையிலான அதிரடிப் படை போலீசார் 4 போலீசாரையும் மீட்க அங்குள்ள வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இதுவரை மாவோயிஸ்டுகளிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்பதால், கடத்தப்பட்ட 4 போலீசாரின் கதி என்ன என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.