நாட்டுக்காக உயிர் தியாகம்- நக்சல் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் பெற்றோர்கள் பெருமிதம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. தங்களின் மகன் நாட்டுக்காக உயிர்தியாகம் செய்திருப்பதாக கூறினர்.
ராஞ்சி: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நேற்று தாக்குதல் நடத்தியதில் 26 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாயினர். இந்த தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. சேலம் கெங்கவல்லியை சேர்ந்த திருமுருகன்,தஞ்சை நல்லூரை சேர்ந்த பத்மநாபன், திருவாரூர் நீடாமங்கலத்தை சேர்ந்த செந்தில்குமார்,மதுரை பெரியபூலாம்பட்டியை சேர்ந்த அழகுபாண்டி ஆகிய வீரர்கள் மரணமடைந்துள்ளனர்.
சட்டீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் உள்ள தெற்கு பஸ்டர் பகுதியில் நக்சலைட் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அந்த மாவட்டத்தின் பர்கபால் - சிந்தாகுவா பகுதியில் நேற்று மதியம் 12.25 மணி அளவில் சிஆர்பிஎப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த நக்சலைட்கள், வீரர்கள் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் தமிழக வீரர்கள் 4 பேர் உட்பட 26 பேர் பலியாகியுள்ளனர். தங்களின் மகன் நாட்டுக்காக உயிர்தியாகம் செய்திருப்பதாக உயிரிழந்த வீரர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
|
ஹீரோக்கள்
இந்த தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த செந்தில்குமார், அழகு பாண்டி, திருமுருகன் பர்மநாதன் ஆகிய 4 பேர் உள்பட 26 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். மேலும், 7 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த ஹீரோக்கள் அனைவரும் உயிர்தியாகம் செய்துள்ளனர் என்று சிஆர்பிஎஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
பெண் பார்த்து வந்தனர்
மதுரை மாவட்டம் திருமங்கலம் பெரியபூலாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட முத்துநாகையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவவீரர் பிச்சைஅழகுவின் 28 வயது மகன் அழகுபாண்டி. இவர் 2009ல் ராணுவத்தில் சேர்ந்தார். சில தினங்களுக்கு முன்புதான் இவர் வீட்டினருடன் பேசியுள்ளார் இவருக்கு பெண் பார்த்து ஏற்பாடு செய்துள்ளதாகவும், விடுமுறையில் வரும் போது திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டுக்காக வீர மரணம்
இந்நிலையில் திங்களன்று இரவு 8 மணிக்கு சத்தீஸ்கரில் நிகழ்ந்த நக்சலைட்களின் துப்பாக்கிச்சூட்டில் அழகுபாண்டி வீரமரணம் அடைந்தார். இதனால் கிராமத்தினரே சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மகன் நாட்டுக்காக உயிரிழந்தது பெருமையான விஷயம். ஏழ்மைநிலையில் இருப்பதால் மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும் என்று தந்தை பிச்சை அழகு கூறியுள்ளார்.
3 குழந்தைகள்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகாவை அடுத்த நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் திருமுருகன். இவர் கடந்த 2000 ல் மத்திய ரிசர்வ் போலீஸ் பணியில் சேர்ந்தார். இவருக்கு திருமணமாகியுள்ளது மனைவி செல்வி. பிரதிபா, தர்ஷினி என்ற பெண் குழந்தைகளும், தீரன் என்ற மகனும் உள்ளனர். இவரது உடல் கோவை வந்து அங்கிருந்து சேலம் வழியாக சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது.
சும்மா விடமாட்டோம்
சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகளால் சிஆர்பிஎப் வீரர்கள் பலியான சம்பவத்தை கேள்விப்பட்டு மிகவும் வேதனைப்பட்டேன். உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலியும், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். நக்சலைட்களின் இந்த தாக்குதலை சவாலாக எடுத்து கொண்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.