23 வயது காமுகனால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட 4 வயது சிறுமி.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
மத்தியப் பிரதேச மாநிலத்தில் 4 வயது குழந்தையை 23 வயது இளைஞர் பலாத்காரம் செய்துள்ளார்.
சாட்னா: மத்திய பிரதேச மாநிலத்தில் 4 வயது குழந்தையை 23 வயது இளைஞர் பலாத்காரம் செய்துவிட்டு சம்பவ இடத்திலேயே விட்டுவிட்டு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
சாட்னா மாவட்டத்தில் பராஸ்மானியா கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திர சிங் கௌட் (23). இவரது உறவினர்கள் குடும்பம் இவரது கிராமத்திலிருந்து ஒரு கி.மீட்டருக்கு அப்பால் உள்ளது.
அங்குள்ள உறவின தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கௌட் இவர்களது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது 4 வயது பெண் குழந்தையின் தந்தை, அக்குழந்தையை கௌட்டிடம் விட்டுவிட்டு வெளியே சென்றார்.
காயமடைந்த குழந்தை
அந்த சமயம் பார்த்து கௌட் குழந்தையை அருகில் உள்ள பன்னா கிராமத்துக்கு அழைத்து சென்று அங்கு வைத்து குழந்தை பலாத்காரம் செய்துவிட்டார். குழந்தை பலத்த காயமடைந்த நிலையிலும் அங்கேயே விட்டுவிட்டு கௌட் புறப்பட்டார்.
குழந்தை குறித்து விசாரணை
இதையடுத்து வேலை முடிந்து வீட்டுக்கு வந்த குழந்தையின் தந்தை, குழந்தையையும், கௌட்டையும் காணாமல் திகைத்தார். இதையடுத்து கிராமத்தினரை திரட்டிகொண்டு குழந்தையை தேடினார். அப்போது கௌட்டிடம் குழந்தை குறித்து விசாரித்தனர்.
மருத்துவமனையில் அனுமதி
அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் குழந்தை இருக்கும் இடத்துக்கு அழைத்து சென்றார். அங்கு குழந்தை மோசமான நிலையில் இருந்ததை பார்த்த தந்தை மற்றும் கிராமத்தினருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. இதையடுத்து கதறி அழுதுக் கொண்டே குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
குழந்தை உடல்நிலை மோசம்
இதையடுத்து சாட்னாவில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். எனினும் இன்று குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் குழந்தையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லவுள்ளனர். இதையடுத்து புகாரின் பேரில் கௌட் கைது செய்யப்பட்டார்.