பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மோடி அரசின் நிதித்துறை சாதனைகள் என்ன? 4 வருட ரிப்போர்ட் கார்டு
ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு போன்றவை சர்ச்சைகளுக்கு நடுவே ஓரளவுக்கு சாதனைகளையும் உருவாக்கிய திட்டங்கள் என்றால் அது மிகை இல்லை.
Recommended Video
டெல்லி: கடந்த 4 ஆண்டு கால மோடி அரசில் அதிகம் பிசியாக இருந்தது நிதி அமைச்சகமாகத்தான் இருக்க முடியும். ஏதாவது ஒரு அதிரடி அறிவிப்புகளை மத்திய அரசு நிதி துறை சார்ந்து வெளியிட்டது.
பணமதிப்பிழப்பு போன்ற திட்டங்கள் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டன. சில திட்டங்கள் பாராட்டை பெறவும் தவறவில்லை.
மோடி அரசின் நான்காண்டு கால நிதி துறை சார் திட்டங்கள் குறித்த ஒரு பருந்து பார்வை இது.
பிரதான் மந்த்ரி சுகன்ய சம்ரித்தி யோஜனா: பெண் குழந்தைகள் பெயரில், சற்று அதிக வட்டி பலன் கிடைக்கும், பணம் டெபாசிட் செய்யும் இந்த திட்டம் 2015ல் துவங்கப்பட்டது. 1.26 கோடிக்கும் அதிக அக்கவுண்டுகள் திறக்கப்பட்டு ரூ.19,183 கோடிக்கும் அதிகமான தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு நவம்பர் நிலவரம் இதுவாகும். ஆனால், சமீபகாலமாகா, இந்த டெபாசிட் மீதான, வட்டி விகிதம் குறைக்கப்பட்டுக் கொண்டே இருப்பது இந்த திட்டத்தின் உண்மையான நோக்கத்தை கெடுப்பதை போல உள்ளது என்பது பெற்றோர் குற்றச்சாட்டாக உள்ளது.
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா: 2015ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் சிறு தொழில்களை வளர்க்கும் நோக்கம் கொண்டது. சிசு, கிஷோர் மற்றும் தருண் ஆகிய 3 பிரிவுகளில் வங்கிகள் மூலம் தொழில் கடன் வழங்கப்படும். இதற்கு கேரண்டி தேவைப்படாது. அதிகபட்சமாக ரூ.50000 சிசு மூலமாகவும், ரூ.50,000 முதல் 5 லட்சம் வரை கிஷோர் பிரிவு மூலமாகவும், ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் தருண் பிரிவு மூலமாகவும் வழங்கப்படும்.
பிரதான் மந்திரி சுரக்ஷா பிமா யோஜனா: 2015ல் துவங்கப்பட்ட இந்த திட்டம், ஏழைகள், ஆதரவற்றோருக்கு காப்பீடு வழங்கும் நோக்கத்திலானது. 18 முதல் 70 வயது வரையிலானவர்களுக்கு மாதம் ரூ.12 செலவில் ப்ரீமியம் கட்டினால் போதும். விபத்தில் உயிரிழந்தோருக்கு, விபத்தால் முழுக்க மாற்றுத்திறனாளிகளாக மாறியவர்களுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரையிலும், பகுதி அளவில் மாற்றுத்திறனாளியானவர்களுக்கு ரூ.1 லட்சமும் கிடைக்கும்.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜனா: 18-50 வயதுக்குட்பட்ட ஏழை, ஆதரவற்றோருக்கு புதுப்பிக்கத்தக்க லைஃப் இன்சூரன்ஸ் ரூ.2 லட்சம் வரையில் கிடைக்கும். ரூ.330 மட்டுமே பிரீமியம்.
அடல் பென்ஷன் யோஜனா: அமைப்புசாரா துறைகளில் பணியாற்றுவோர், தினக்கூலி வேலை பார்ப்போருக்கும் ஓய்வு காலத்தில் ஓய்வூதியம் கிடைக்க இந்த திட்டம் வகை செய்கிறது. 18 முதல் 40 வயதுக்குட்பட்டோர் இத்திட்டத்தில் இணையலாம். பயனாளிகள் அதிகபட்சமாக 1000 ரூபாய் வரை பிரீமியம் செலுத்தலாம். பயனாளிகள் செலுத்தும் தொகையில் 50 விழுக்காட்டை மத்திய அரசும் செலுத்தும்.
பிரதான் மந்திரி வயா வந்தன் யோஜனா: கடந்த வருடம் அறிமுகமான திட்டம் இது. மூத்த குடிமக்களுக்கு சமூக பாதுகாப்பளிப்பது இதன நோக்கம். 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் ஓய்வூதியம் பெறும் வகையிலான திட்டம் இதுவாகும்.
ஸ்டேன்ட்அப் இந்தியா: 2016ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம், பெண் தொழில் முனைவோர், தலித்துகள் பழங்குடியின பிரிவு தொழில் முனைவோரை வங்கி கடன் மூலம் ஊக்குவிக்கிறது. ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கடன் பெற முடியும். 2.5 லட்சம் பேர் பலனடைந்துள்ளனர்.
பண மதிப்பிழப்பு: புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என 2016, நவம்பர் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கறுப்பு பணத்தை ஒழிப்பதே இதன் நோக்கம் என்றார். இதனால் டிஜிட்டல் பரிவர்த்தனை நாட்டில் அதிகரித்துள்ளது. இதனால் பணத்தை திருட்டுத் தனமாக கை மாற்றுவது குறைந்துள்ளது.
நாட்டில் புதிதாக 50 லட்சம் வங்கி கணக்குகள் உருவாக்கப்பட்டு அதன் வெளியாக வெளிப்படைத்தன்மையோடு ஊதியம், கூலி வழங்கப்படுகிறது. 2015-16 முதல் 2016-17 நிதியாண்டுக்கு நடுவேயான கால கட்டத்தில், வரி செலுத்துவோர் எண்ணிக்கை 26.6% உயர்ந்துள்ளது. வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 27.95% உயர்ந்துள்ளது.
ஜிஎஸ்டி: கடந்த வருடம் ஜூன் மாதம் 30ம் தேதி நள்ளிரவு (ஜூலை 1 அதிகாலை) முதல் அமலுக்கு வந்தது ஜிஎஸ்டி வரி விதிப்பு. 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு வகை வரி விதிப்பு நடைமுறை இதில் உள்ளது. இதனால் பொருட்கள் மீதான வரி என்பது பழைய நடைமுறையை காட்டிலும், 25-30% குறைந்துள்ளது. தொழில்களை எளிதாக நடத்த ஜிஎஸ்டி வகை செய்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால், உலக வழங்கியின் கணக்கீடுபடி, எளிதாக தொழில் தொடங்க கூடிய நாடுகள் பட்டியலில் 142வது இடத்தில் இருந்த இந்தியா 100வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.