4 ஆண்டை நிறைவு செய்த மோடி அரசு- வெளிநாடுகளில் சிக்கிய 10,000 இந்தியர்களை மீட்ட வெளியுறவு அமைச்சகம்
4 ஆண்டுகளில் 10,000 இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டது வெளியுறவுத் துறை அமைச்சகம்.
டெல்லி: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தொடர்ந்து ஊடகங்களில் பேசுபொருளாக இருக்கிறது. 4-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான வெளியுறவுத்துறை அமைச்சகம், யுத்த களத்தில் அகப்பட்டு தத்தளித்த இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வந்தது.
வெளிநாடுகளில் தத்தளித்த 10,000க்கும் அதிகமான இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டது வெளியுறவுத் துறை அமைச்சகம். டோக்லாம் பிரச்சனைக்கு தீர்வு காண்பதிலும் வெளியுறவுத்துறை அமைச்சகம் முனைப்பு காட்டியது. டோக்லாமில் தற்போதைய நிலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார் சுஷ்மா ஸ்வராஜ்.
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இடையே டோக்லாம் விவகாரத்தில் பரஸ்பர புரிதலை ஏற்படுத்த முன் முயற்சிகளை எடுத்தவர். மோடி அரசின் 4-வது ஆண்டை முன்னிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த சுஷ்மா ஸ்வராஜ், டோக்லாமை முன்வைத்து ஒரு யுத்த சூழல் நிலவியது. ஆனால் இருநாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டன என்றார்.
பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலமாக சீனாவுடனான பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக சர்வதேச சமூகம் இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்தது என்றும் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார். பேச்சுவார்த்தை மூலம் டோக்லாம் சிக்கலுக்கு தீர்வு காணாமல் இருந்திருந்தால் யுத்தத்துக்குதான் வழிவகுத்திருக்கும் என்றார். தற்போது டோக்லாமில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து முன்னைய நிலைமையே நீடிக்கிறது எனவும் சுஷ்மா ஸ்வராஜ் பதிலளித்தார்.
கைலாஷ் மானசரோவர் யாத்ரீகள் ஏரியில் புனித நீராட சீனா அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறதே என்கிற கேள்விக்கு பதிலளித்த சுஷ்மா ஸ்வராஜ், அது சரியான தகவல் அல்ல. புனித நீராடலுக்கு ஒரு தனிபகுதி ஒதுக்கப்பட்டு அது தொடர்ந்து நடைபெறுகிறது என்றார். மேலும் இருதரப்பு சந்திப்புகள் மூலம் இரு நாடுகளிடையேயான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். அதுதான் நம்பிக்கைகளை வலுப்படுத்தும் என்றும் சுஷ்மா கூறினார். மேலும், பிரதமர் மோடி எப்ப பேச விரும்பினாலும் தம்மை அழைக்கலாம் எனவும் ஜின்பிங் கூறினார். அதேபோல சீனா அதிபரிடமும் நமது பிரதமர் மோடியும் இதுபோல தம்மை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டவர்கள்:
2014-ம் ஆண்டில் 1,100 பேர் உக்ரைனில் இருந்தும் லிபியாவில் இருந்து 3750 பேரும் ஈராக்கில் இருந்து 7200 பேரும் மீட்கப்பட்டனர்.
2015-ம் ஆண்டில் ஏமனில் இருந்து 4748 இந்தியர்கள் உட்பட 6710 பேரும் 2016-ல் தென் சூடானில் இருந்து 153 இந்தியர்களும் மீட்கப்பட்டனர்
2016-ல் சவூதி அரேபியாவில் இருந்து 1500 இந்தியர்கள் நாட்டுக்கு திருப்பி அழைத்து வரப்பட்டனர்.
மீட்கப்பட்ட பாதிரியார்கள், இமாம்கள்
ஆப்கானிஸ்தானில் இருந்து பாதிரியால் அலெக்ஸ் பிரேம் குமார், ஜுதித் டி சோசா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
ஏமனில் இருந்து கேரளாவைச் சேர்ந்த அருட் சகோதரி சேலி மீட்கப்பட்டார்.
இமாம்களான சையத் ஆசிப் அலி நிஜாமி, நஜிம் அலி நிஜாமி பாகிஸ்தானில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர்.
இ விசா நடைமுறையானது 180 நாடுகளுக்கு மேல் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.