நாளிதழ்களில் இன்று: நான்காண்டுகால மோதியின் ஆட்சி: 57% பேர் திருப்தி
முக்கிய இந்திய நாளிதழ்களில் வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
மத்தியில் ஆளும் நரேந்திர மோதியின் தலையிலான பாஜகவின் நான்காண்டுகால ஆட்சி தங்களுக்கு திருப்தி அளிப்பதாக 57 சதவீதம் பேர் தெரிவித்துள்ளதாக லோக்கல் சர்க்கிள் என்ற இணையதளம் நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்கள் மோதி தலைமையிலான நான்காண்டுகால ஆட்சியில் இந்தியாவை பற்றிய உலக நாடுகளின் பார்வை, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, நாட்டின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் வரிவிதிப்பு மேம்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
அதே வேளையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்தல் மற்றும் மருத்துவ செலவுகளை குறைத்தல் போன்றவற்றில் மத்திய அரசாங்கம் சரியாக செயல்படவில்லை என்று மக்கள் தெரிவித்துள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தி இந்து (தமிழ்): விசில் செயலியில் குவியும் புகார்கள்
மக்கள் நீதி மய்யத்தின் விசில் செயலி வெளியிடப்பட்ட இரண்டு வாரத்தில் 10 ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும், அதில் குவிந்து வரும் புகார்களை சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு எடுத்துச்செல்வதற்கு தனியே குழுவொன்று அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாக தி இந்து (தமிழ்) செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் குடும்பத்தினருக்கு 14 நாடுகளில் சொத்துகள் உள்ளதாகவும், மேலும் 21 வெளிநாட்டு வங்கிகளில் அவர்கள் சுமார் 20,208 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டியுள்ளதாக தி இந்து (தமிழ்) செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இதன் காரணமாகத்தான் கடந்த காங்கிரஸ் அரசு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கருப்புப் பணம் தொடர்பாக விசாரணை நடத்தும் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்காமல் காலதாமதம் செய்து வந்தது என்றும் அவர் கூறியதாக அந்நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தினத்தந்தி: "சந்திரயான்-2 விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படுகிறது"
சந்திரயான்-2 விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் அதிவேக இணையதள பயன்பாட்டை சாத்தியப்படுத்தும் வகையில் ஜிசாட் 29 என்ற செயற்கைக்கோளை இந்தாண்டுக்குள் ஏவுவதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாகவும், மீண்டும் மீண்டும் பயன்படுத்தத்தக்க வகையிலான ராக்கெட்டை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அண்மையில் அமெரிக்க பயணம் மேற்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், தமிழகம் திரும்பியதும் தனது அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், இந்நிலையில் நேற்று சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில், இளைஞர் அணி செயலாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தியதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
"இளைஞர் அணியை வலுப்படுத்துவது எப்படி? மக்களை சேர்ப்பது எப்படி? இளைஞர்களை சேர்ப்பது எப்படி? என்று ரஜினிகாந்த் ஆலோசனை கூறியிருக்கிறார். கூடிய விரைவில், தமிழகம் முழுவதும் பெரிய அளவில் இளைஞர்கள் எங்கள் கட்சியில் சேர இருக்கின்றனர்" என்று நிர்வாகி ஒருவர் தெரிவித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- ''வட கொரியாவில் தனியார் நிறுவன முதலீட்டுக்கு அமெரிக்கா அனுமதிக்கலாம்''
- இஸ்ரேலும், இரானும் ஏன் சண்டையிடுகின்றன? - 300 வார்த்தைகளில்
- ஸ்வீடனில் இருந்து சூரத் வரை : தாயை தேடி ஒரு பயணம்
- இந்தோனீசியா: தேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல் - 13 பேர் பலி