ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் "மோத" ஸ்ரீராம் சேனா தலைமையில் 40 இந்துத்துவா அமைப்புகளின் கூட்டியக்கமாம்...
பெங்களூர்: ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் "மோதுவதற்காக" ஸ்ரீராம் சேனா தலைமையில் 40 இந்துத்துவா அமைப்புகள் ஒன்றிணைந்து கூட்டியக்கத்தை உருவாக்கியுள்ளன.
பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிக்க புதிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்பை உருவாக்க ஹிந்து ஜனஜக்ருதி, ஸ்ரீராம் சேனா ஆகியவை முயற்சிகளை மேற்கொண்டது.
இந்த கூட்டியக்கம் குறித்து ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தலிக் ஒன் இந்தியாவிடம் கூறியதாவது:
இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதத்துக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொள்ளத்தான் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல. நாங்கள் தீவிரவாதத்தைத்தான் எதிர்க்கிறோம்.
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இளைஞர்கள் சேருவதற்காக மூளைச் சலவை செய்யப்படுகின்றனர். இவர்கள் ஐ.எஸ். இயக்கத்தில் சேருவதை நாங்கள் தடுப்போம். அவர்களிடம் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் கோர முகத்தை விளக்குவோம். இந்த பிரசாரத்தில் இஸ்லாமியர்களும் இணைந்து கொள்ளலாம்.
இதற்காக ஒரு இணையதளமும் தொடங்கப்படும். சமூக அமைதியின்மையை உருவாக்குவது என்பது எங்களது நோக்கம் அல்ல. ஐ.எஸ். இயக்கத்தின் அச்சுறுத்தலில் இருந்து இந்தியா பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.
இவ்வாறு முத்தலிக் கூறினார்.
இந்த ஸ்ரீராம் சேனாதான் மங்களூருவில் பப்புகளில் உள்ளே நுழைந்து பெண்களை அடித்து துவைத்தது. அண்மையில் கூட பேராசிரியர் கல்பர்கி படுகொலையில் இந்த அமைப்பின் நிர்வாகிகள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டனர். கடந்த மாதம் இந்து கடவுள்களை அவமதிப்போரின் நாக்கை அறுப்போம் என்றும் ஸ்ரீராம் சேனா எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.