ஈராக்கில் 40 இந்தியர்கள் கடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது: மத்திய அரசு தகவல்!!
டெல்லி: ஈராக்கில் மாயமான 40 இந்தியர்கள் சதாம் ஆதரவுப் படையினரால் கடத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஈராக்கில் கடந்த 2 வாரங்களாக முன்னாள் அதிபர் சதாம் உசேனின் ஆதரவுப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ்., பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி பாக்தாத் நோக்கி முன்னேறி வருகிறது. சிரியா மற்றும் ஈராக்கில் சன்னி முஸ்லிம்களுக்கான நாடு அமைப்பதுதான் இந்த அமைப்பின் நோக்கம்.
இந்த நிலையில் சதாம் ஆதரவுப் படை வசம் வீழ்ந்த மொசூல் நகரில் பணியாற்றிக் கொண்டிருந்த 40 இந்திய கட்டுமான பணியாளர்கள் மாயமானதாக கூறப்பட்டது. இது தொடர்பாக ஈராக்குக்கு இந்தியாவின் சிறப்பு தூதராக சுரேஷ் ரெட்டி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து கருத்து இன்று காலையில் தெரிவித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அக்பரூதீன், 40 இந்தியர்களும் கடத்தப்பட்டார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் ஈராக்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளால் அந்த 40 பேரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறியிருந்தார்.
இதன் பின்னர் இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய அக்பருதீன், 40 இந்தியர்களும் கடத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடத்தப்பட்டோரை விடுவிக்க பிணையத் தொகை கோரியோ அல்லது வேறு எந்த ஒரு தகவலுடன் இதுவரை யாரும் தொடர்பும் கொள்ளவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச அமைப்புகளைத் தொடர்பு கொண்டிருக்கிறோம். இந்தியர்கள் இருக்கும் இடத்தை தெரியப்படுத்துமாறு அவர்களிடம் கேட்டிருக்கிறோம் என்றார்.
முன்னதாக டெல்லியில் நேற்று கிழக்கு நாடுகளுக்கான வெளியுறவு அமைச்சக செயலர் அனில் வாத்வா, இந்தியாவுக்கான ஈராக் தூதர் அகமது தெர்வாரியை சந்தித்து அங்குள்ள நிலவரங்களைக் கேட்டறிந்தார்.