அசாமில் வசிப்பவர்களில் 40 லட்சம் பேருக்கு குடியுரிமை மறுப்பு
அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்.ஆர்.சி.) இரண்டாவது மற்றும் கடைசி வரைவுப்பட்டியல் திங்கள்கிழமை வெளியானது. இந்தப் பட்டியலில் 2.89 கோடி பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், இந்தப் பதிவேட்டில் இடம் பெற விண்ணப்பித்த மக்களின் எண்ணிக்கை 3.29 கோடி. இதனால், மீதமுள்ள சுமார் 40 லட்சம் பேரின் இந்தியக் குடியுரிமை மறுக்கப்பட வழியேற்பட்டுள்ளது.
இதையடுத்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் இதை எதிர்த்து ஆவேசமாக கேள்வி எழுப்பினர். இதனால் அவை நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
1971ம் ஆண்டு மார்ச் 25க்கு முன்பிருந்தே அந்த மாநிலத்தில் வசிப்பவர்களின் பெயர்களை தொகுப்பதே இந்தப் பட்டியல். சட்டவிரதோக் குடியேறிகளை களையெடுப்பதே இந்தப் பட்டியலின் நோக்கம்.
என்.ஆர்.சி.யின் முதல் வரைவுப் பட்டியல் கடந்த டிசம்பர் 31-ஜனவரி 1க்கு இடைப்பட்ட இரவில் வெளியானது. அதில் 1.9 கோடி பெயர்களே இருந்தன.
குவஹாத்தியில் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்த இந்தியப் பதிவுத் துறைத் தலைவர் சைலேஷ் சதுர்வேதி இந்தத் தகவல்களை தெரிவித்தார்.
"இந்தியாவுக்கும், அசாமுக்கும் இந்த நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நடவடிக்கையின் அளவு முன்னெப்போதும் இல்லாதது. இது உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் நடந்த சட்ட நடவடிக்கை" என்று அவர் குறிப்பிட்டார்.
அசாம் மாநிலத்தில் வசிக்கும் அனைவருமே தங்கள் குடியுரிமையை நிரூபிக்க உரிய ஆவணங்களோடு இந்தப் பட்டியலில் இடம் பெற விண்ணப்பிக்கவேண்டும் என்று கோரப்பட்டது.
மாநிலத்தில் வசிக்கும் பெங்காலி முஸ்லிம்களின் குடியுரிமையை மறுக்கவும், அவர்களை முடியுமானால், நாடு கடத்தவும் இந்தப் பட்டியலை ஒரு சாக்காகப் பயன்படுத்துவதே நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் நோக்கம் என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டினர்.
ஆனால், பட்டியலில் இடம் பெறாதவர்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று தெரிவித்துள்ளார் இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். அவர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வாய்ப்பளிக்கப்படும் என்றும், உடனடியாக நாடு கடத்தும் நடவடிக்கைகள் ஏதும் இருக்காது என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- கருணாநிதி உடல்நிலை: மருத்துவமனையை சுற்றி பலப்படுத்தப்பட்ட போலீஸ் காவல்
- காப்பீட்டு நிறுவனங்களிடம் உரிமை கோரப்படாமல் இருக்கும் பெரும் நிதி
- இறந்து 60 ஆண்டுகளுக்குப் பின் அடையாளம் காணப்பட்ட பனிச்சறுக்கு வீரர்
- ஒரு பொறியாளரின் இறுதிச் சடங்கில் ஆயிரக் கணக்காணோர் திரண்டது ஏன்?