வியாபம் ஊழல்... 40 பேர் கொண்ட சிபிஐ குழு விசாரணையைத் தொடங்கியது
டெல்லி: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வியாபம் ஊழல் தொடர்பாக 40 பேர் கொண்ட சிபிஐ குழு இன்று விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் தொழில்முறை தேர்வு வாரியமான வியாபம் மூலம் அரசு பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தேர்வுகளில் சிலர், லஞ்சம் கொடுத்து எளிதாக வேலைவாய்ப்பை பெற்று சென்றதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக மத்திய பிரதேச சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தி அரசியல் பிரமுகர்கள், முக்கிய புள்ளிகள் என பலரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்நிலையில் வியாபம் ஊழல் வழக்கில் தொடர்புடையவர்களாக கருதப்படும் 49 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தனர். மேலும் வியாபம் முறைகேட்டில் மத்திய பிரதேச முதல்வரான பாரதிய ஜனதாவின் சிவராஜ் சிங் சவுகானுக்கும் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு வலுத்து வருகிறது.
அதனைத் தொடர்ந்து வியாபம் முறைறேடு வழக்குகளை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தனி குழுவை அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்த உத்தரவில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இதனை ஏற்று வியாபம் ஊழலை விசாரிப்பதற்காக இணை இயக்குநர் நிலையில் உள்ள அதிகாரிகளின் கீழ் 40 பேர் கொண்ட தனி குழு ஒன்றை சிபிஐ அமைத்துள்ளது.
இந்தக் குழு இன்று போபால் சென்று தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது. வருகிற 24-ம் தேதிக்குள் இந்தக் குழு தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும் எனக் கூறப்படுகிறது.
சிறிய தவறுகள் கூட நடைபெற்று விடக் கூடாது என்பதற்காக இந்த சிறப்பு படையில் இடம்பெற்றுள்ள 40 பேர் மற்றும் அவர்களுக்கு தலைமை வகிப்பது யார் என்பது குறித்த விவரங்களை சிபிஐ மிகவும் ரகசியமாக வைத்துள்ளது.