அட அப்ரசண்டிகளா.... டிக்கெட் எடுக்காமல் ரயில் கக்கூஸில் மறைந்தபடி பயணித்த 40 போலீஸார்!
ஆக்ரா: ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணி்ப்பதை சிலர் பழக்கமாக வைத்துள்ளனர். டிடிஆரின் சோதனையிலிருந்து தப்பிக்க இவர்கள் செய்யும் தந்திரங்கள் வியப்பை ஏற்படுத்துபவை.
இந்த நிலையில் ஆக்ராவில் ஒரு ரயிலில் நடந்த சோதனையின்போது டிக்கெட் எடுக்காமல் பயணித்ததாக "கொத்தாக" ஒரு கும்பல் சிக்கியது. அவர்களிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், சிக்கிய 40 பேரும் போலீஸார் என்பதால்.
வி.கே.சிங் என்ற அதிகாரி தலைமையில் இந்த சோதனை, மஹாகெளஷல் எக்ஸ்பிரஸ் மற்றும் சட்டிஸ்கர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் நடத்தப்பட்டது. அப்போது 130 பேர் சிக்கினர். அவர்களில் 40 பேர் ரயில்களின் கழிப்பறையில் பதுங்கியிருந்து பிடிபட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது நாற்பது பேரும் காவலர்கள் என்று தெரிய வந்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இவர்கள் ஆக்ரா, மதுரா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பணியில் இருந்தவர்கள் ஆவர். இவர்கள் ஏன் டிக்கெட் எடுக்காமல் பயணித்தனர் என்பது தெரியவி்லை. இருப்பினும் விதிமுறைப்படி இவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
ரயில் கழிப்பறையில் போலீஸார் 40 பேர் பதுங்கியிருந்து பயணித்த செயல் உ.பியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.