டெல்லி மங்கோல்புரியில் பயங்கர தீவிபத்து- 400 குடிசைகள் எரிந்து நாசம்!
டெல்லி: டெல்லியில் உள்ள மங்கோல்புரி பகுதியில், இன்று அதிகாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஏறக்குறைய 400 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவம் நடந்த பகுதிக்கு 28 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. தற்போது தீ கட்டுக்கொள் கொண்டுவரப்பட்ட போதும் தீ விபத்துக்கான முழு காரணம் இன்னும் வெளிவரவில்லை.
இதுவரையில் யாரும் காயமடைந்ததாகா தெரிவிக்கப்படவில்லை. அதிகாலை 2 மணியளவில் தொலைபேசிச் செய்தி வந்ததையடுத்து தீயணைப்பு வீரர்கள் அக்குடிசைப் பகுதிக்கு விரைந்துள்ளனர்.
அதற்குள் பக்கத்தில் அமைந்திருந்த ஒரு பிளாஸ்டிக் குடோனிலும் பரவிய தீயால், குடிசைகளுக்கு தீ மளமளவென பரவியுள்ளது. குடிசையையும், பொருட்களை இழந்துள்ள மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் மிஞ்சிய பொருட்களுடன் சாலையோர நடைபாதைகளில் அமர்ந்துள்ளனர். இத்தீவிபத்து குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான வசிப்பிடம் குறித்தும் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.