400 ஆண்டுகளாக சாபத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் மைசூர் மன்னர் பரம்பரை
பெங்களூர்: மைசூர் மன்னர் பரம்பரை 400 ஆண்டுகளாக சாபத்தின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது.
1612ம் ஆண்டு ராஜா உடையார் மைசூரை விஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த திருமலராஜாவிடம் இருந்து கைப்பற்றினார். அப்போது திருமலராஜாவின் மனைவி அலமேலம்மா ராஜ நகைகளை எடுத்துக் கொண்டு தலக்காட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார். தனது கணவரிடம் இருந்து ராஜ்ஜியம் பறிக்கப்பட்டதால் அவர் ஆத்திரம் அடைந்திருந்தார்.
நகைகளை வாங்க உடையாரின் வீரர்கள் அலமேலம்மாவை கண்டுபிடித்தபோது கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அவர் அருகில் உள்ள காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
சாபம்
தற்கொலை செய்யும் முன்பு அவர் உடையார் பரம்பரைக்கு சாபம் அளித்தார். அதாவது தலக்காடு மண்ணாக போகட்டும், காவிரி கரையில் இருக்கும் மலங்கி நீர்ச்சுழிகளால் சூழட்டும், மைசூரின் உடையார்களுக்கு வாரிசு இல்லாமல் போகட்டும் என்று சாபமிட்டார்.
அலமேலம்மாவுக்கு சிலை
அலமேலம்மா தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்த உடையார் மைசூர் அரண்மனையில் அவரது சிலையை வைத்து தெய்வமாக வணங்கினார். அந்த பழக்கம் இன்றும் தொடர்கிறது.
சாபம் பலித்தது
அவர் சாபமிட்டதுபோன்றே தலக்காடு மண்ணாக போனது. மலங்கியில் காவிரியில் உயிரைக் குடிக்கும் நீர்சுழிகளாக உள்ளது. உடையார் மன்னர்களுக்கு ஒரு தலைமுறை விட்டு மறு தலைமுறையில் தான் வாரிசுகள் பிறந்தார்கள்.
கடைசி வாரிசு மரணம்
ஒரு மன்னருக்கு வாரிசு இல்லை என்றால் அவர் தனது தம்பியின் மகனை வாரிசாக அறிவித்தார். உடையார் மன்னர்களில் கொண்டாடப்பட்டவரான நல்வாடி கிருஷ்ணராஜ உடையார் வாரிசு இல்லாததால் தனது உடன் பிறப்பின் மகனான ஜெயசாம்ராஜாவை வாரிசாக அறிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை இறந்த ஸ்ரீகண்டதத்தா உடையார் ஜெயசாம்ராஜாவின் மகன் ஆவார். ஸ்ரீகண்டதத்தா வாரிசு இன்றி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த வாரிசு?
ஸ்ரீகண்டதத்தாவுக்கு அவரது அக்கா ராணி காயத்ரி தேவியின் மகன் கந்தராஜே அர்ஸ் இறுதிச் சடங்குகளை செய்தார். கந்தராஜே அடுத்த வாரிசாக அறிவிக்கப்படக்கூடும் என்று தெரிகிறது.