தூள் கிளப்புகிறார் கெஜ்ரிவால்... லஞ்ச அதிகாரிகள் குறித்து 7 மணி நேரத்தில் 4000 போன் அழைப்புகள்
டெல்லி: லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் குறித்துத் தகவல் தெரிவிக்க ஆம் ஆத்மி அரசு அறிவித்த ஹெல்ப்லைன் முறைக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாம். ஹெல்ப்லைன் அறிவிக்கப்பட்ட 7 மணி நேரத்தில் 4000 அழைப்புகள் வந்து குவிந்து விட்டதாம்.
டெல்லியில் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள், ஊழியர்களை பற்றி தகவல் தர பொது மக்களுக்கான அவசர உதவி தொலைப்பேசி எண்களை அம்மாநில முதல்வர் கேஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்.
அதிகாரிகள் எவரேனும் லஞ்சம் கேட்டால், 011- 2735 7169 என்ற ஹெல்ப்லைனுக்கு தொடர்புகொண்டு விவரத்தைச் சொல்லலாம். இது, ஹெல்ப்லைன் தானே தவிர, புகார் எண் கிடையாது என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
ஆதாரத்துடன் பிடிக்கலாம்
பாதிக்கப்பட்ட நபரே புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, லஞ்சம் கேட்டவரை ஆதாரத்துடன் சிக்க வழிவகுக்கப்படும். அதற்கான வழிகாட்டுதல்களை டெல்லி ஊழல் தடுப்புப் படை வழங்கும்.
காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை
டெல்லியில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஹெல்ப்லைன் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பலமான ஆதரவு
இந்த ஹெல்ப்லைனுக்கு இப்போது புகார்கள் வந்து குவிய ஆரம்பித்துள்ளதாம்.
7 மணி நேரத்தில் 4000அழைப்புகள்
தொடங்கப்பட்ட 7 மணி நேரத்தில் 4000 அழைப்புகள் வந்து குவிந்து விட்டதாம். அழைப்புகளைக் கையாள முடியாமல் ஊழியர்கள் திணறுவதால் கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனராம்.
15 நிபுணர்கள் ரெடி
இந்த தொலைபேசி அழைப்புகளை, இதற்காக பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ள 15 நிபுணர்கள் வசம் பார்வர்ட் செய்கின்றனர். அவர்கள் தொலைபேசியில் புகார் கூறுபவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்குவார்கள். அதன் பின்னர் ஸ்டிங் ஆபரேஷன் எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்த டிப்ஸும் தரப்படும்.
கண்டுபிடிச்ச பிறகு
ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கிடைத்த ஆதாரத்தை அப்படியே ஊழல் தடுப்புப் போலீஸாருக்கு அனுப்பி வைப்பார்கள். அவர்கள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கையில் இறங்குவார்கள்.