3 ஆண்டுகளில் விபத்துக்குள்ளான 42 பாதுகாப்புத் துறை விமானங்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்
டெல்லி: இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த விமான விபத்துகளில் பாதுகாப்பு மற்றும் பாராமிலிட்டரியினர் 42 பேர் பலியாகியுள்ளனர்.
அரசு தகவலின்படி இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை விமான விபத்துகள் 42 நடந்துள்ளது. இந்த விபத்துகளில் பாதுகாப்புத் துறை மற்றும் பாராமிலிட்டரியைச் சேர்ந்த 42 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் இருந்து கிளம்பிய டோர்னியர் விமானம் மாயமாகியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த 8ம் தேதி இரவு மாயமான கடலோர காவல்படை விமானமான டோர்னியர் பற்றி இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
டோர்னியர்
இந்த ஆண்டில் விபத்தில் சிக்கியுள்ள இரண்டாவது டோர்னியர் விமானம் இது. மாயமான விமானத்தில் இருந்த 3 பேர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது. முன்னதாக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி கோவா கடற்கரை அருகே கடற்படைக்கு சொந்மான டோர்னியர் விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
விமானங்கள்
விபத்துக்குள்ளான 28 விமானங்களில் 14 எம்.ஐ.ஜி. விமானங்கள் அடக்கம். எம்.ஐ.ஜி. ரக விமானங்கள் பறக்கும் சவப்பெட்டிகள் என்று விமானிகள் தெரிவித்து வருகிறார்கள். கடந்த 20 ஆண்டுகளில் 198 எம்.ஐ.ஜி. விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. அந்த விபத்துகளில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த 151 விமானிகள், துணை விமானிகள் பலியாகியுள்ளனர்.
இழப்பு
கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த 42 விமான விபத்துகளால் அரசுக்கு ரூ. 1,127.37 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கண்காணிப்பு
கடலோர பகுதிகளில் தினமும் நடக்கும் கண்காணிப்பு பணியில் 8 விமானங்கள் மற்றும் 19 முதல் 22 கடலோர காவல்படை கப்பல்கள் ஈடுபடுகின்றன. டோர்னியர் ஸ்குவாட்ரன் முதன்முதலாக 1987ம் ஆண்டு ஜனவரி மாதம் தாமனில் துவங்கப்பட்டது. இந்த ஸ்குவாட்ரன் தேடல், மீட்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.