கேரளா காசர்கோடு கல்யாணத்துக்கு போன 43 பேருக்கு கொரோனா இப்படித்தான் பரவிச்சாம்
காசர்கோடு மாவட்டத்தில் நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்ற 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
காசர்கோடு: கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி என்பார்கள். கல்யாணத்திற்குப் போன இடத்தில் கொரோனா பரவினால் எப்படி இருக்கும் அதுவும் பெண், மாப்பிள்ளைக்கும் கொரோனா பரவினால் 10 நாட்களுக்கு மேல் சிகிச்சைக்காக பிரித்து வைத்துவிடுவார்கள். இப்படி ஒரு சோகமான சம்பவம் கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவி வருவதால் திருமணம், பண்டிகைகளில் 20க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்க தடை உள்ளது என்றாலும் எத்தனை பேர் அதை மதித்து பின்பற்றுகிறார்கள் என்று தெரியவில்லை. சொந்தக்காரர்கள் வீட்டு விழாக்களுக்கு போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள்.
அப்படித்தான் கேரளாவின் காசர்கோடு மாவட்டம் செங்கலாவை அடுத்த பிலங்கட்டா கிராமத்தில் கடந்த 17ஆம் தேதி ஒரு திருமணம் நடைபெற்றது. இந்த கல்யாணத்தில் அரசின் உத்தரவை மீறி 125 பேர் பங்கேற்றனர். அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் 43 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று தெரியவந்தது. மணப்பெண்ணின் அப்பாவிற்குத்தான் முதலில் கொரோனா உறுதியானது.
அவரைத் தொடர்ந்து கல்யாணப் பெண், மாப்பிள்ளை மற்றும் சொந்தக்காரர்கள் 43 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அனைவருமே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி என் ஆர் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பாலன் கொரோனா விற்கு மரணம்
மணப்பெண்ணின் தந்தை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மணமகன் சில மாதங்களுக்கு முன்புதான் துபாயில் இருந்து கேரளா வந்திருக்கிறார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.