கேரளா: இடுக்கி மாவட்டத்தில் தொடரும் முழு அடைப்பு!
இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கஸ்தூரி ரங்கன் குழுவின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக முழு அடைப்புப் போராட்டம் இன்றும் தொடர்கிறது.
கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு அளித்த அறிக்கையின்படி, மத்திய வனத் துறை மற்றும் சுற்றுசூழல் துறை அமைச்சகம் மேற்கு தொடர்ச்சி மலையை மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால், கேரளத்தில் மேற்கு தொடர்சி மலையின் பெரும் பகுதியான இடுக்கி, வயநாடு ஆகிய 2 மாவட்டங்களில் 60% இடங்களில் சுற்றுலா, விவசாயம் உள்ளிட்டவை பாதிக்கப்படும் என்பதால் இதை கண்டித்து சமர சமதி, இடதுசாரி கூட்டணி கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளின் சார்பில் கேரளா முழுவதும் ஒருநாள் முழு அடைப்பும், இடுக்கி, வயநாட்டில் 48 மணி நேர முழு அடைப்பும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
நேற்றைய முழு அடைப்புப் போராட்டம் மிகவும் அமைதியாக நடைபெற்றது. இடுக்கி, வயநாட்டில் 48 மணி நேர முழு அடைப்பு போராட்டம் தொடர்கிறது.
இதனால், மாவட்டம் முழுவதும் அரசு, தனியார் பேருந்துகள், லாரிகள், ஆட்டோக்கள், ஜீப்புகள் உட்பட அனைத்து வாகனங்களும் ஓடவில்லை. ஹோட்டல்கள், கடைகள், பெட்ரோல் பங்க்குகள் உள்பட அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் எர்ணாகுளம், திருவனந்தபுரம், கோட்டயம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் அரசு பேருந்துகளும் கம்பத்திலிருந்து இடுக்கி மாவட்டம் கட்டப்பனை, நெடுங்கண்டம், மூணாறு, வண்டிப்பெரியாறு, ஏலப்பாறை ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டு, பின்னர் திருப்பி அனுப்பப்பட்டன.
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், கூடலூர், உத்தமபாளையம், தேவாரம், போடி, கோம்பை, பண்ணைப்புரம் உட்பட அனைத்து பகுதிகளில் இருந்தும் இடுக்கி மாவட்டத்துக்கு 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் தோட்டத் தொழிலாளர்கள் பணிக்குச் செல்லவில்லை.
சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களையும், தமிழக எல்லையில் நிறுத்தி, பின்னர் 10 வாகனங்கள் வரை ஒன்றாகச் சேர்த்து தமிழக போலீஸார் அனுப்பி வைத்தனர்.
ஒரு சில இடங்களில் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் சாலையில் சமையல் செய்தனர்.
அதிகளவு சுற்றுலாத் தலங்களை கொண்ட இடுக்கி மாவட்டத்தில் ஹோட்டல்கள், கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால், உணவு கிடைக்காமலும், அத்தியாவசியப் பொருள்களுக்கும் திண்டாடும் நிலை ஏற்பட்டது. இதனால் மாவட்ட முழுவதும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்தது.