அப்பாடா... ஜம்மு-காஷ்மீரில் 2 ஆண்டுகளுக்கு பிறகு.... 4ஜி இணைய சேவை தொடக்கம்!
ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் 2 ஆண்டுகளுக்கு பிறகு 4ஜி இணைய சேவை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் 4ஜி இணைய சேவை துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டது.
இதனால் ஜம்மு-காஷ்மீரில் இணைய சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. மொபைல் போன்களில் 2ஜி இணைய சேவை வசதியானது கடந்த ஆண்டு ஜனவரியில் மீண்டும் வழங்கப்பட்டது. ஆனால் 4ஜி இணைய சேவை மீண்டும் தொடங்கப்படவில்லை. சில மாவட்டங்கள், சில பகுதிகளில் மட்டும் 4ஜி இணைய சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் முழுவதும் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் 4ஜி இணைய சேவை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் முதன்மை செயலாளர் ரோஹித் கன்சால் 4 ஜி மொபைல் இணைய சேவைகள் மீண்டும் முழு அளவில் தொடங்கப்படுவதாக அறிவித்தார்.