குஜராத் அனல் மின்நிலையத்துக்கு எதிர்ப்பு- 5,000 விவசாயிகள் தற்கொலைக்கு அனுமதி கோருவதால் பதற்றம்
பாவ்நகர்: குஜராத்தில் அனல் மின் நிலையத்துக்காக விளை நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வருகின்றனர். தற்போது 5,259 விவசாயிகள் அரசின் நடவடிக்கையைக் கண்டித்து தற்கொலை செய்ய அனுமதி கோரி கடிதம் அளித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் அனல் மின்நிலையம் அமைக்க அம்மாநில அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக பாவ்நகர் மாவட்டத்தின் 12 கிராமங்களில் விளைநிலங்களை கையகப்படுத்தி வருகிறது அரசு.
20 ஆண்டுகளாக இதற்கு எதிராக தொடர் போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். அண்மையில் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க கண்ணீர்புகை குண்டுகளையும் போலீஸ் வீசியிருந்தது.
தற்போது அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, 5259 விவசாயிகள் தாங்கள் தற்கொலை செய்ய அனுமதிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் அளித்துள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.