32 வயது பெண்ணை கடத்தி அறையில் அடைத்து வைத்து 3 நாட்களாக பலாத்காரம் செய்த 5 பேர்
குர்காவ்ன்: 32 வயது பெண்ணை கடத்தி, ஒரு அறையில் அடைத்து வைத்து மூன்று நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்திய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் குர்காவ்னில் உள்ள டிஎல்எப் ஃபேஸ் 5ல் தங்கி வீட்டு வேலை செய்து வந்துள்ளார். கடந்த 1ம் தேதி இரவு வீட்டில் இருந்த அவரை தலிப் என்கிற பில்லு, ரூப் சந்த், விகாஸ், மோர்சிம் மற்றும் அகில் ஆகிய 5 பேர் ரிக்ஷாவில் கடத்தி, அடித்து, நிர்வாணமாக்கி டெல்லியின் வாசிராபாத் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு ஒரு அறையில் அந்த பெண்ணை அடைத்து வைத்து அந்த 5 பேரும் அவரை 3 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த 3 நாட்களும் அந்த பெண்ணுக்கு உணவு எதுவும் அளிக்கவில்லை. மேலும் அந்த 5 பேர் தாக்கியதில் அந்த பெண்ணின் தலையில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது.
இந்நிலையில் வாசிராபாத் பகுதியில் பெண் ஒருவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தபோது உடல் முழுவதும் காயங்களுடன் ஒரு பெண் இருப்பதை பார்த்து அவரை மீட்டனர்.
மேலும் அந்த பெண்ணை அடைத்து வைத்து துன்புறுத்திய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அந்த பெண் அல்தாப் என்பவருக்கு கடன் கொடுத்துள்ளார். கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது அல்தாப் தகராறு செய்துள்ளார், பணத்தை தர மறுத்துள்ளார். இதையடுத்து அல்தாப் தலிபிடம் அந்த பெண்ணுக்கு பாடம் கற்பிக்குமாறு தெரிவித்துள்ளார்.
அல்தாப் கூறியதையடுத்து தான் தலிப் அந்த பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்துள்ளார்.