காஷ்மீரில் 5 மே.வங்க கூலித் தொழிலாளர்கள் சுட்டுப் படுகொலை- தொடரும் தீவிரவாதிகள் வெறிச்செயல்
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் 5 மேற்கு வங்க கூலி தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காஷ்மீரில் கடந்த 15 நாட்களில் பிற மாநிலத்தவர் 11 பேர் இதுவரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் ஐரோப்பிய நாடாளுமன்ற குழு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு நீக்கத்துக்குப் பின்னரான நிலைமை குறித்து அம்மக்களிடம் ஐரோப்பிய குழு கருத்து கேட்டு வருகிறது.
இந்நிலையில் தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் கட்ரசு என்ற இடத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 5 கூலித் தொழிலாளர்களை தீவிரவாத கும்பல் சுட்டுப் படுகொலை செய்துள்ளது. கூலித் தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதிக்குள் நுழைந்து இந்த படுகொலையை நிகழ்த்தியுள்ளனர் தீவிரவாதிகள்.
"5 கிலோ குறைந்துவிட்டார் ப சிதம்பரம்.. குடல் அழற்சி நோயால் அவதி.. தனித்துவமான சிகிச்சை தேவை"
தீவிரவாதிகள் அட்டூழியம்
370-வது பிரிவு நீக்கத்துக்குப் பின்னர் பிற மாநிலத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள், கூலித்தொழிலாளர்களை இலக்கு வைத்து தீவிரவாதிகள் சுட்டுப் படுகொலை செய்து வருகின்றனர். கடந்த 14-ந் தேதி ஜம்மு காஷ்மீரில் செல்போன் சேவைகள் மீண்டும் இயங்க தொடங்கின.
பிற மாநிலத்தவர் படுகொலை
இதன்பின்னர் வெளிமாநிலத்தவர் மீதான தாக்குதல்களை தீவிரவாதிகள் அதிகரித்துள்ளனர். கடந்த 15 நாட்களில் 11 வெளி மாநிலத்தவரை தீவிரவாதிகள் படுகொலை செய்துள்ளனர்.
பாதுகாப்பு படை தேடுதல் தீவிரம்
தற்போதைய தீவிரவாதிகளின் தாக்குதல்களில் சுட்டுக் கொல்லப்பட்ட அனைவரும் மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இப்படுகொலை நடந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
370-வது பிரிவு நீக்கம்
அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு, அதனுள் இணைக்கப்பட்டிருந்த 35 ஏ சரத்து ஆகியவை ஜம்மு காஷ்மீரில் வெளிமாநிலத்தவர் குடியேறி சொத்துகளை வாங்குவதற்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கொண்டிருந்தன. இதனால் ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சி தடைபட்டுள்ளது என மத்திய அரசு கூறியது.
யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு
இதையடுத்து 370வது பிரிவை ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலமானது ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன.
தீவிரவாதிகள் எதிர்ப்பு வெளிப்பாடு
இதனால் இந்தியாவின் பிற மாநிலங்களைப் போல வெளிமாநிலத்தவர் குடியேறவும் சொத்துகளை வாங்கவும் முதலீடு செய்யவும் வாய்ப்புகள் ஏற்பட்டன. ஆனால் இதை ஏற்க மறுக்கும் தீவிரவாதிகள் வெளிமாநிலத்தவரை குறிவைத்து படுகொலை செய்து வருகின்றனர்.
மாயமான கூலித் தொழிலாளர்கள்
அங்கு மேலும் பல வெளிமாநில கூலித் தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களையும் தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.