சுதந்திர தினத்திலும் பாக், ராணுவம் அத்துமீறல்.. ஜம்மு எல்லை கிராமங்கள் மீது குண்டுவீச்சு..5 பேர் பலி
ஜம்மு : நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட நிலையில், பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய முகாம்கள் மற்றும் எல்லைப்பகுதி கிராமங்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் 5 பேர் பலியாகினர்.
பாகிஸ்தான் படைகள் கடந்த ஒரு வார காலமாக எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள இந்திய முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
7-வது நாளாக இன்று ஜம்மு பிராந்தியத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதியில் உள்ள இந்திய முகாம்கள் மீது பாகிஸ்தான் படைகள் மோர்ட்டர் ரக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக இந்திய படைகளும் தாக்குதல் நடத்தின.
பாகிஸ்தான் படைகள் தாக்கியதில் பஞ்சாயத்து தலைவர் உள்பட 5 பேர் கொல்லப்பட்டதாகவும், ஒரு குழந்தை உள்பட 5 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய பிரதமர் மோடிக்கு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தது, இருதரப்பு நட்புறவு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கான அடித்தளமாக கருதப்பட்ட நிலையில், பாகிஸ்தான் ராணுவம் அதை சீர்குலைக்கும் வகையில் எல்லையில் பதட்டத்தை உருவாக்கி வருகிறது.
இந்த மாதத்தில் மட்டும் 32 முறை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று மாலை முதல் இன்று காலை வரை பாகிஸ்தான் வீரர்கள் 60 மிமீ மற்றும் 82 மிமீ ரக மோர்ட்டார் குண்டுகளை மாண்டி, ஹமிர்பூர் மற்றும் சாஜியான் செக்டார்களில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் வீசி அத்து மீறியுள்ளது.
இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை வரும் 23 மற்றும் 24 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.