மகாராஷ்டிரா சட்டசபையில் அமளி- ஆளுநர் காயம்! 5 காங். எம்.எல்.ஏக்கள் 2 ஆண்டுகள் சஸ்பென்ட்!!
மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்ற பாஜகவின் பட்நவிஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இன்று காலை கூடியது. முதல் நடவடிக்கையாக பாஜகவின் பக்தே சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்குச் சீட்டு முறையைப் பயன்படுத்தாமல் குரல் வாக்கெடுப்புக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதற்கு சிவசேனா, காங்கிரஸ் ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குரல் வாக்கெடுப்பில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை.
இதனைத் தொடர்ந்து பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபித்துவிட்டதாக சபாநாயகர் அறிவித்தார். ஆனால் இதனை ஏற்க முடியாது என்று சிவசேனா, காங்கிரஸ் கட்சிகள் போர்க்கொடி தூக்கின.
Five Cong MLAs suspended for creating ruckus in Maharashtra Assembly leading to injury to Governor C Vidyasagar Rao.
— Press Trust of India (@PTI_News) November 12, 2014
சிவசேனா, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சட்டசபை வளாகத்தில் தர்ணா போராட்டமும் நடத்தினர்.
அப்போது சட்டசபையின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றுவதற்காக ஆளுநர் வித்யாசகர் ராவ் வருகை தந்தார். அவரது காரை முற்றுகையிட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
பின்னர் சட்டசபையில் ஆளுநர் உரையாற்றிக் கொண்டிருந்த போதும் அவரை சூழ்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பலரும் 'பெரும்பான்மை முறையாக நிரூபிக்கப்படவில்லை' என்று கூறி முழக்கங்களை எழுப்பினர். இதனால் சட்டசபை அமளிக்காடானது. இதில் ஆளுநருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரையின் போது கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டு அவருக்கு காயம் ஏற்படக் காரணமாக இருந்த 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை சஸ்பென்ட் செய்ய வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்தது. இருப்பினும் காங்கிரஸின் 5 எம்.எல்.ஏக்களை 2 ஆண்டுகாலத்துக்கு சஸ்பென்ட் செய்வதாக அதிரடியாக சபாநாயகர் பக்தே அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராகுல் போந்த்ரே, அப்துல் சத்தார், வீரேந்திர ஜெக்தாப், அமர் காலே ஆகியோர்தான் சஸ்பென்ட் செய்யப்பட்டவர்கள்.