அடுத்த வாரம் தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகள் செயல்படாதா? தீயாக பரவும் தகவல்.. உண்மை என்ன?
டெல்லி: வரும் செப்டம்பர் 3ம் தேதி கிருஷ்ண ஜென்மாஷ்டமி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், செப்டம்பர் 3ம் தேதி திங்கள்கிழமை முதல் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் வங்கி சேவையில் பாதிப்பு வரும் என்று வதந்திகள் சோஷியல் மீடியாவில் பரவி வருகின்றன.
கிருஷ்ண ஜென்மாஷ்டமி, அதன்பிறகு ரிசர்வ் வங்கி ஊழியர்களின் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் உள்ளிட்டவற்றையெல்லாம் சேர்த்து கலந்து கட்டி இந்த வதந்திகள் பரவி வருகின்றன.
இதனால், இன்றும், நாளையும் வங்கிகளை நோக்கி படையெடுக்க வேண்டுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
நிதி அமைச்சகம்
இதுகுறித்து நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது: செப்டம்பர் முதல் வாரத்தில் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்று சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. இதன் காரணமாக மக்கள் மத்தியில் தேவையற்ற பீதி ஏற்பட்டுள்ளது .
என்று விடுமுறை
இதன் மூலம் நாங்கள் அளிக்க விரும்பும் விளக்கம் என்னவென்றால் செப்டம்பர் முதல் வாரத்தில் வங்கி நடவடிக்கைகளில் எந்த பாதிப்பும் இருக்காது. செப்டம்பர் 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை செப்டம்பர் எட்டாம் தேதி, இரண்டாவது சனிக்கிழமை என்பதால் விடுமுறை.
கிருஷ்ண ஜெயந்தி
திங்கள்கிழமை செப்டம்பர் 3 ஆம் தேதி, கிருஷ்ண ஜென்மாஷ்டமியாகும். இருப்பினும், நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது. சில மாநிலங்கள் மற்றும் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. அன்றைய தினங்களில் கூட அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஏடிஎம் மையங்கள் முழுமையாக செயல்படும்.
ஏடிஎம்களில் பணம் உள்ளது
விடுமுறை தினங்களிலும், ஆன்லைன் வங்கி பரிவர்த்தனைகளில் எந்த பாதிப்பும் இருக்காது. அனைத்து ஏடிஎம் மையங்களில் போதிய அளவுக்கு பணத்தை இருப்பு வைக்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்ற தினங்களில் வங்கிகள் அனைத்தும் திறந்திருக்கும். இவ்வாறு நிதி அமைச்சகம் தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது