மகாராஷ்டிராவில் ரயில் தடம் புரண்டு விபத்து: 5 பேர் பலி, 50 பேர் படுகாயம்
நாசிக்: மகாராஷ்டிரா அருகே எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியதில் 5 பேர் பலியாகியுள்ளனர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரம் மாநிலம் நாசிக் மாவட்டம் இகாத்புரி அருகே, இன்று அதிகாலை, 6.20 மணியளவில் நிசாமுதீன் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண்-12618) கோதி-இகாத்புரி நிலையங்களுக்கு இடையே வந்த போது, திடீரென ரயில் பெட்டிகள் தடம் புரண்டதாகத் தெரிகிறது.
இந்த விபத்தில் 10 பெட்டிகள் தடம் புரண்டதில், 5 பயணிகள் பரிதாபமாகப் பலியானார்கள். 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில், பலரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விபத்துக்கான காரணம் குறித்து ஆராய பொறியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.
ரயில் விபத்து காரணமாக மன்மாட்-குர்லா-கோதவரி எக்ஸ்பிரஸ், மன்மாட்-மும்பை பஞ்சாவதி எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.