ஜம்மு காஷ்மீரில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் 5 பேர் விடுதலை
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஆகஸ்ட் 5-ந் தேதி முதல் சிறைவைக்கப்பட்டிருந்த 5 முன்னாள் எம்.எல்.ஏக்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை மத்திய அரசு ஆகஸ்ட் 5-ல் நீக்கியது. அப்போது ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்கள், இயக்கங்களின் நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் இன்னமும் சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய கோரி தொடர்ந்து குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மத்திய அரசு படிப்படியாக அரசியல் கைதிகளை விடுதலை செய்து வருகிறது. தற்போது பிடிபி கட்சியின் 2 முன்னாள் எம்.எல்.ஏக்கள், தேசிய மாநாட்டு கட்சியின் 2 முன்னாள் எம்.எல்.ஏக்கள், ஒரு முன்னாள் சுயேட்சை எம்.எல்.ஏ. ஆகிய 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எம்.எல்.ஏக்கள் ஹாஸ்டலில் தங்கியிருந்த நிலையில் 5 பேரும் சிறை வைக்கப்பட்டனர்.