ம.பி., விவசாயிகள் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூடு - ஐவர் பலி - தலா 1 கோடி நிதி அறிவிப்பு
மத்தியப் பிரதேத்தில் விவசாயிகள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு விவசாயிகள் உட்பட ஐவர் கொல்லப்பட்டதால் பதற்றம் உருவாகியுள்ளது.
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பக்கிச் சூட்டில் 2 விவசாயிகள் உள்பட 5 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் கடந்த சில நாள்களாக விவசாயிகள், அவர்கள் விளைவிக்கும் பயிர்களுக்கு அதிக விலை கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது போல், தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள் மன்ட்சவுர் என்னும் இடத்தில் போராட்டம் நடத்தினர். நேற்று மாலை பிபல்யா மண்டி பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததாக, கூறி அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாய்பர்சநாத் பகுதியில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 விவசாயிகள் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.
மாநிலத்தின் பல பகுதிகளில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் பால் மற்றும் காய்கறி கிடைப்பதில் பெரும் சிக்கல் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசம் மட்டுமன்றி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, செவ்வாய் இரவு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், விவசாயிகள் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.
மேலும், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50 லட்சம் அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.