பீகார்: குடும்பத் தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சிறுமிகள் சுட்டுக்கொலை
கயா: பீகாரில் நேற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சிறுமிகள் மர்ம நபர்கள் சிலரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பீகாரின், கயா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த குடும்பத்தினர் மீது அங்குள்ள ஒருவர் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் தலைமறைவானதாகச் சொல்லப் படுகிறது.
அதனைத் தொடர்ந்து, நேற்றிரவு அவர்களது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கு உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை சரமாரியாகச் சுட்டுள்ளனர். இதில் 5 பெண் குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்கள். ஆனால் சிறுமிகளின் சகோதரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
தனிப்பட்ட விரோதம் காரணமாக தங்களின் தூரத்து உறவினர்கள் இந்த கொலையை செய்திருப்பதாக குழந்தைகளின் குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி, குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.