டெல்லி ஓட்டலில் ரூ.3.25 கோடி பறிமுதல்.. ஐ.டி. அதிரடி ரெய்டு
டெல்லியில் ஓட்டல் ஓன்றில் ரூ.3.25 கோடி பழைய ரூபாய் நோட்டுக்கள் சிக்கியது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறுது.
டெல்லி: வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் டெல்லி, கரோல் பாக் பகுதியில் ரூ.3.25 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. இதன்காரணமாக, செல்லாததாக அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் மோசடிகள் நடப்பதாகப் புகார் எழுந்தது.
அதனைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனைகள் நடத்தி வருகின்றனர். சோதனையில் கோடிக்கணக்கான கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் டெல்லி கரோல் பாக் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் போலீஸார் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய சோதனையில் ரூ.3 கோடியே 25 லட்சம் பழைய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை அனைத்தும் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் ஆகும்.
இது குறித்து டெல்லி காவல் துறை இணை ஆணையர் ரவீந்திரா யாதவ் கூறும்போது, "விமான நிலையத்தில் உள்ள ஸ்கேனிங் மெஷின்கூட கண்டுபிடிக்க முடியாத வகையில் பணத்தை பேக்கிங் செய்துள்ளனர்" என்றார். இந்தப் பணத்தை வைத்திருந்த அன்சாரி அபுசார், பஸல் கான், அன்சார் அபான், லடு ராம், மகாவீர் சிங் ஆகியோரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் மும்பையைச் சேர்ந்த ஹவாலா இடைத் தரகர்களுடையது என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.