எல்லாமே அதிரடி.. ஒரே மாதத்தில் பல மாற்றம்.. 30 நாளில் 5 முக்கிய தீர்ப்புகள்!
இந்திய நீதித்துறை கடந்த 30 நாட்களில் மிக முக்கியமான 5 வழக்குகளில் தீர்ப்பு வழங்கி உள்ளது.
Recommended Video
சென்னை: இந்திய நீதித்துறை கடந்த 30 நாட்களில் மிக முக்கியமான 5 வழக்குகளில் தீர்ப்பு வழங்கி உள்ளது.
இந்திய நீதித்துறை வரலாற்றில் இது மிக முக்கியமான மாதம் ஆகும். கடந்த செப்டம்பர் 6ம் தேதி தொடங்கி இன்று வரை உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கி உள்ளது.
[ இது நல்ல முடிவு.. கலாச்சாரங்கள் மாறும்... சபரிமலை குறித்து கமல் கருத்து ]
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெறும் முன் 5 முக்கிய வழக்குகளில் சிறப்பான தீர்ப்பை வழங்கி புகழ் பெற்று இருக்கிறார். இதில் சில தீர்ப்புகள் உலகம் முழுக்க வைரலாகி உள்ளது.
377 தீர்ப்பு
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரான இந்திய தண்டனை சட்ட பிரிவு 377ஐ நீக்கி உள்ளது. கடந்த 6ம் தேதி உச்ச நீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் ஓரினச்சேர்க்கை சட்டப்பூர்வமாக்கப்பட்டது. சட்ட பிரிவு 377 நீக்கப்பட்டதை அடுத்து நாடு முழுக்க திருநங்கைகளும், திருநம்பிகளும், ஓரினசேர்க்கையாளர்களும் சேர்ந்தது இந்த தீர்ப்பை கொண்டாடினார்கள்.
ஆதார் தீர்ப்பு
ஆதார் குறித்த வழக்கில் கடந்த 26ம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரம் கேட்பது சட்ட விரோதம் என்றுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் விவரத்தை மக்கள் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளது. தீர்ப்பின் படி ஆதார் சட்டத்தின் 57வது பிரிவு நீக்கப்பட்டது. இதனால் இனி தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரத்தை கோர முடியாது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.
497 வழக்கு
நேற்று திருமண உறவிற்கு வெளியே ஆணும், பெண்ணும் பாலியல் உறவு மேற்கொள்வது தவறு கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது கிரிமினல் குற்றச் செயல் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்திய தண்டனை சட்டமான சட்ட பிரிவு 497ஐ நீக்ககோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை அளித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.
அயோத்யா துணை வழக்கு தீர்ப்பு
நேற்று அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில், வழிபாட்டில் மசூதி அவசியமா என்று வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி அசோக் பூஷன் ஒரே தீர்ப்பு வழங்கினார்கள். நீதிபதி அப்துல் நசீர் தனி தீர்ப்பு வழங்கினார்.இதில் அயோத்தி துணை வழக்கை அரசியல் சாசன அமர்விற்கு மாற்ற தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கினார்கள்.
சபரிமலை வழக்கு
இந்த நிலையில் இன்று சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. நீதிபதி இந்து மல்ஹோத்ரா தனி தீர்ப்பு வழங்கி உள்ளார். இதனால் அனைத்து வயது பெண்களும் இனி சபரிமலை கோவிலுக்குள் செல்ல முடியும்.