ஸ்பைஸ் ஜெட் விமானம் வெளியிட்ட புகையால் உடைந்து சிதறிய பஸ் கண்ணாடி.. பயணிகள் பலருக்கு காயம்
டெல்லி: ஸ்பைஸ் ஜெட் விமானம் விட்ட புகை காரணமாக இன்டிகோ விமான பயணிகள் பயணித்த பஸ்சின் கண்ணாடிகள் உடைந்து 5 பேர் காயமடைந்த சம்பவம் டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை நடைபெற்ற இந்த விபத்து குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நேற்று மாலை சுமார் 5 மணியளவில் டெல்லியிலிருந்து மும்பை செல்லும் இண்டிகோ விமானத்தில் ஏறுவதற்காக, ஏர்போர்ட் பஸ் மூலம் பயணிகள் விமானத்திற்கு பயணித்தனர்.
அதேநேரம், டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் எஸ்ஜி-253 விமானம், பார்க்கிங் பகுதிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது 'ஜெட் பிளாஸ்ட்' செய்துள்ளது அந்த விமானம்.
அதிவேக புகை
ஜெட் பிளாஸ்ட் என்பது, அதிவேகமாக புகையை வெளியேற்றும் ஒரு செயல்முறை. விமானங்கள் டேக்-ஆப் ஆகும்போது இதுபோல பெரும் உந்துதல் அதற்கு தேவைப்படும் என்பதால் ஜெட் பிளாஸ்ட் செய்யப்படும். அப்போது அருகே ஏதேனும் வாகனங்கள் நின்றால் அதை தூக்கி எறிந்திவிடும் அளவுக்கு புகை வெளியே வரும்.
கண்ணாடிகள் உடைந்தன
இப்படி ஜெட் பிளாஸ்ட் ஆன நிலையில், அதன் தாக்கத்தால் இண்டிகோ விமான பயணிகள் பயணித்த பஸ்சின் வலது முன்பக்க கண்ணாடி, வலதுபக்க ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.
காயம்
இந்த சம்பவத்தில் பஸ்சில் பயணித்த 5 பயணிகள் லேசான காயமடைந்தனர். அவர்கள் மீது கண்ணாடி துகள்கள் குத்தின. இதையடுத்து உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக ஏர்போர்ட்டிலுள்ள கிளினீக்கில் அனுமதிக்கப்பட்டனர்.
விசாரணை
இதுகுறித்து ஏர்போர்ட் அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள், முன்னெச்சரிக்கை மூலம் தடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அதிகாரிகள் மெத்தனத்தால் இந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.